பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





ஆகஸ்டு 19



இறைவா, என் உள்ளத்தில் ஞான ஒளிவிளக்கை ஏற்றுக!

இறைவா, நேற்று நன்றாக வாழ அருள் புரிந்தனை. நன்றிப் பெருக்கு நிறைந்த போற்றுதல்கள் ஆயிரம், ஆயிரம் உனக்கு இறைவா, இன்றும் வாழ அருள் செய்க!

இறைவா, நீ தாய்! சேயாகிய என் தேவை உனக்குத் தெரியாதா? அதை நீயே அருள் செய்க! இறைவா. இன்று நீ பாராமுகமாக இருப்பது ஏன்? நான் பாவி என்பதனாலா? தாயாக விளங்கும் நீ என்னைப் பாவி என்று புறக்கணிக்கலாமா?

இறைவா நீ புறக்கணித்தால் வேறு யார் எனக்குத் துணை? நானா பாவம் செய்கிறேன்! நீ, கொடுத்த ஊன் பொதி உடல் தானே பாவத்தைத் தூண்டுகிறது! என் உடல் அதன் தேவைகளையே நாடுகிறது!

என் உடலுக்குத் தியாகமோ, அர்ப்பணிப்பு உணர்வோ இல்லை! இறைவா. உடலைத் திருத்து! என் உடலைச் சமூக உழைப்பில் ஈடுபட அருள் செய்! எளிதில் நெகிழ்ந்து கொடுக்கக்கூடிய உருக்கத்தினைத் தா! என் உள்ளத்தில் ஞான ஒளிவிளக்கை ஏற்றுக! நின் அருளின்பத் தேனை - உலப்பிலா ஆனந்தத்தை வழங்குக.

இறைவா, ஒரு வேண்டுகோள்! நீ என் கூடவே வர வேண்டும்! ஆம் இறைவா, நான் எங்கு போனாலும் நீ வர வேண்டும். நான் வாழ்க்கையில் வழுக்கி விழுந்து விடாமல் என்னைத் தொடர்ந்து வந்து காப்பாற்ற வேண்டும்! தவறி விழுந்துவிட்டால் தூக்க வேண்டும்.

இறைவா, நீயே என் செல்வம்! நீ பெருங்கருணையுடன் என் உடலிடத்தில் எழுந்தருளி அருள் செய்கின்றனை. இறைவா, ஆயிரம், ஆயிரம் போற்றிகள்!