பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

249





ஆகஸ்டு 20



இறைவா, நின்னை மறவா வரம் தந்தருள் செய்க!

இறைவா, நினைப்பும் மறப்பும் இல்லாத தலைவனே! நின் கருணைக்கு ஆயிரம் ஆயிரம் போற்றிகள்! இறைவா, உன்னை நினைந்தபடியே நான் வாழ ஆசைப்படுகிறேன். நான் மறந்தாலும் என்நா, நின் நாமத்தை மறக்காது.

என்னுடைய இடர்கள் நிறைந்த வாழ்க்கைப் பாதையில் நான் தளர்ந்தொழிந்தாலும் உன்னை ஒரு பொழுதும் மறக்க ஒருப்படேன். வழுக்கி வீழ்ந்தாலும் நின் திருநாமம் மறக்க மாட்டேன். உன்னை நினைந்தே என் ஆவி கழியும்.

இறைவா, ஆயினும் என் வாழ்க்கை அலைகடல் எனக் கொப்புளிக்கிறது! ஆர்ப்பரிக்கிறது! ஆயிரம் ஆயிரம் வேலைகள், ஏராளமான பணிகள்! செய்து முடிக்க வேண்டிய பணிகளுக்குரிய காலம் இல்லை. இருக்கும் காலமும் பொய்யாய். கனவாய், பழங்கதையாய்க் கரைந்து கொண்டிருக்கிறது!

இறைவா, இன்று எனக்கு ஏராளமான வேலைகள் உள்ளன. இறைவா, எனக்குள்ள பணிகளின் நெருக்கடி உனக்குத் தெரிந்ததே. ஆதலால், நான் பணிக் களத்தில் நின்று செய்ய வேண்டியிருக்கிறது. இந்தப் பணிகளின் நெருக்கடி காரணமாகவும் உன்னை ஒரு பொழுதும் மறக்கமாட்டேன்.

இறைவா, என்னையும் அறியாத சூழ்நிலையில் உன்னை நினைக்க நான் மறந்துவிட்டால் என்னை மன்னித்து விடு! நீ என்னை மறக்காதே! நீ என்னை மறப்பது முறையன்று, நீ, நினையும் ஆற்றல் இல்லாத புல், பூண்டு, பறவைகள், விலங்குகளுக்கு எல்லாம் அருளிச் செய்கின்றனை !

இறைவா, என்னை நீ மறத்தல் கூடாது! இதுவே என் வேண்டுகோள், பிரார்த்தனை. என்னை உன் நினைவில் இருத்தி அருள் செய்க. நின்னை மறவாத வரம் தந்தருள் செய்க!