பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

259






ஆகஸ்டு 30



இறைவா, மனம் நல்லதாக அமைய அருள்க!

இறைவா, ஏன், மனம் என்ற ஒன்றினைத் தந்தனை? இந்த மனம் என்னோடு ஒத்துழைப்பதே இல்லை.

மனம் நாலு புறமும் சுற்றி அலைகிறது; கண்ட கண்ட செய்திகளை எல்லாம் கொண்டுவந்து சேர்க்கிறது. இதனால் நான் உணர்ச்சி வசப்படுகிறேன். ஆத்திரம் வருகிறது. கோபம் வருகிறது. ஏன், பகைமை கொண்டும் விடுகின்றேன்.

இறைவா, முதலில் என்னை இந்த மனத்தினிடமிருந்து விடுதலை செய். அல்லது மனத்துக்கு நான் சொன்னபடி நடக்குமாறு புத்திமதி கூறு! இறைவா, என்ன சொல்கிறாய்! மனம், அதற்கென்று இயல்பு அற்றது.

நான் பழக்குவதைப் பொறுத்து மனம் பழகுகிறது. இறைவா, நான் என் மனத்தை அடக்க வேண்டும். ஆம் இறைவா, மனதிற்கு ஓயாது நல்ல வேலைகள் கொடுத்தால் அது ஒழுங்காக இருக்கும்! சொன்னபடி கேட்கும்.

என் மனம் ஓயாது நல்ல எண்ணங்களை எண்ணும்படி அருள்க! நல்ல கலைஞானங்களைப் பயின்றிட அருள்க! அன்பு செய்யும் பழக்கத்தில் ஈடுபட அருள்க! அப்புறம் பார். மனம் நல்லதாக அமையும்.

மனம் ஒரு குதிரை போன்றது! இந்த மனத்தை அறிவு, காலம் என்ற இரு பட்டையுடைய கடிவாளம் போட்ட குதிரைகளைப் போலாக்கிடுக! இறைவா, மனம் நல்லதாக அமைய அருள் செய்க!