பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





ஆகஸ்டு 31



கடமைகளை இப்போதே செய்யும் மனப்பாங்கினை அருள்க.

இறைவா, காலகாலனே! இந்த வியத்தகு உலகத்தின் நிகழ்வுகளைக் கால நியதிகளின்படி இயக்குபவனே இறைவா, நீ பெரியோன்! ஆற்றல் மிக்குடையோன். ஆயினும் காலங் கடத்துவதில்லை.

இறைவா, உரிய காலங்களில் உரிய கடமைகள் நிகழ்கின்றன! இறைவா, என்ன அற்புதம்! நானோ இன்று நாளை என்று எத்தனை நாள்களைக் கடத்துகின்றேன். ஆம் இறைவா, நான் இன்று வாழ ஆசைப்படுவதில்லை! நாளைக்கு வாழ்வதாக எண்ணம்; திட்டம்.

இறைவா, நான் ஒரு சோம்பேறி. சோம்பேறி இன்று எதுவும் செய்ய மாட்டான். நாளை என்று இன்றைய கடமையை ஒத்திப் போடுவான். நாளை வேறு புதிய கடமைகள் வந்து நிற்கும். நிறையச் செய்ய வேண்டியிருக்கும். சோம்பலுடையார்க்குக் காலம் ஒரு வழுக்குப் பாறை.

இறைவா, இன்று நாளை வருமா? இன்று நான் ஒன்று செய்து பயன் பெற்றால் பயன் கூடுதல் அல்லவா? இறைவா, உண்மை உணர்ந்தேன். இனி என் வாழ்க்கையில் சோம்பல் தலைகாட்டாதிருக்க அருள் செய்க!

"நாளை" என்பது வரையறையில்லாத ஓர் எல்லை. நாளை, நாளை என்றே ஆண்டுக் கணக்கில் ஓடிவிடும்! ஆன்மவளர்ச்சி கெடும். ஆக்கம் கெடும். இறைவா, இன்றே எனது நாள்! நாளை என்னுடையதல்ல.

இறைவா, என் கடமைகளை இன்றே, இப்பொழுதே செய்யும் மனப்பாங்கினை அருள் செய்க! இன்றே செய்க! இப்பொழுதே செய்க. இதுவே என் நிலை. இறைவா, கடமைகளை உடனே செய்ய, அருள் செய்க.