பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

263






செப்டம்பர் 3


இறைவா, என் மனம் எனக்கு நட்பாக இருக்க அருள் செய்க.


இறைவா, நினைப்பவர் மனம் கோயிலாகக் கொள்ளும் தலைவா! இறைவா, என் மனம் ஓர் அறை. இந்த அறையை நான் பூட்டி வைத்துவிட்டால் என்ன உள்ளே போகும்? கதிரொளி போகாது! காற்று உள் புகாது. இந்த அறையில் நான் எப்படி வாழமுடியும்? வாழ்ந்தாலும் இன்ப வாழ்க்கையாக அமையுமா?

இறைவா, என் மனம் எனும் அறையை நான் பூட்டி வைத்து விட்டேன். எந்தப் புத்தறிவும் என்னிடம் வரா வண்ணம் பூட்டி வைத்து விட்டேன்! பழைமை அல்லது என் பழக்கங்களே சரி என்று முடிவுக்கு வந்து, வளர்ச்சிக்குரிய வாயிலையே அடைத்துவிட்டேன்.

ஞானப் பேரொளி நுழையா வகையில் இருளையே கொள் பொருளாக, அறியாமையையே என் பொருள் எனக் கொண்டுழல்கின்றேன். நல்லவர்கள் நாலுபேருடன் பழகி, கொண்டும், கொடுத்தும் என்மனத்தை வளப்படுத்தாமல் வாழ்கின்றேன்.

இறைவா, இவ்வளவு மோசமான மனத்தில் நீ எப்படி எழுந்தருளியிருக்கிறாய். இறைவா, என் மனம் என் வசமாதல் வேண்டும். எனக்கு ஏன் நூறாயிரம் நட்புகள்.

என் மனம் எனக்கு நட்பாக இருந்தாலே போதும். என் மனம் நேற்றைய நிகழ்வுகள் பற்றிய கவலையைத் தூக்கிச் சுமப்பதைத் தவிர்க்க வேண்டும். என் மனம் நாளைக்கு ஆபத்து வரப்போகிறது என்று இன்றே அழுவானேன்? அழக்கூடாது.

நாளை வரும் ஆபத்தை இன்றைய நன்மனம் நிச்சயமாகச் சந்திக்கும்! வெற்றி கொள்ளும்! இறைவா, என் மனத்தை நன்னட்பாக்க முயற்சி செய்கிறேன்! இறைவா, அருள் பாலித்திடுக!