பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






செப்டம்பர் 4


இறைவா, என்னை அடிமைக்கு ஆளாக்கும் ஆசைகளிலிருந்து மீட்டு எடுத்தாள்க!

இறைவா, என் தலைவா! நான் உனக்கே ஆட்பட்டேன்! ஆனால் ஆட்கொண்ட நீ கைவிட்டு விட்டனை! என்னை ஐம்பொறிகளுக்கும் போகத்திற்கும் பொய்க்கும் ஒத்தியாகக் கொடுத்து விட்டனை! நான் என்ன பிழை செய்தேன்!

இறைவா, இப்பிறப்பில் யானறி தீவினை யாதொன்றும் செய்திலேன்! எந்தவினை இங்ஙனம் வந்து மூண்டது? இறைவா, எந்த வினை வந்து மூண்டால் என்ன? இப்பிறப்பில் நான் என் தீவினைகளை வெற்றி கொண்டிடத் துணிந்து முயற்சி செய்கின்றேன்! அருள் செய்க!

எய்த்துக் களைத்துப் போகும் போது ஆற்றலாக நின்றருள் செய்திடுக! நான் உனக்கே அடிமை! நான் உனக்கே ஏவல் செய்வேன்! நான் மண்ணில் வாழ்வார் யாருக்கும் குற்றவேல் செய்ய மாட்டேன்! நான் பொய்யில் கிடக்க மாட்டேன்! பொய்யிலாத மெய்யே என் வாழ்க்கையின் இலட்சியம்.

இறைவா, நான் பொய்யிலிருந்து விடுதலை பெற்றாலே அச்சத்திலிருந்து விடுதலை பெற்றுவிடுவேன். இறைவா, நான், அடிமைத் தனத்திலிருந்து மீள அருள் செய்க!

இறைவா, என்னை, அடிமைக்கு ஆளாக்கும் ஆசை களிலிருந்து மீட்டு எடுத்தாள்க! இறைவா, ஆசைகளால் விளையும் பொய்யிலிருந்து விடுதலை தருக. பொய்யிலிருந்து மீண்டு அச்சமிலாத பெரு வாழ்வு வாழ அருள் செய்க!

இறைவா, என் வாழ்க்கையில் துன்பமே தலைக் காட்டாத வண்ணம் வாழ்ந்திட அருள் செய்க! இன்பமே என்றும் சூழ்க! இறைவா, அருள் பாலித்திடுக!