பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

265






செப்டம்பர் 5


அன்பு செய்தலே என் வாழ்க்கையின் தொழிலாக அமைய அருள் செய்க!

இறைவா, பெருந்தகையாளனே! நின் பெருந்தகைமைக்கு யாது கைம்மாறு? நான் பெருந்தகையாளனாக விளங்க அருள் செய்க! ஆம், இறைவா! நான் சின்னச் சின்னச் செய்திகள் பற்றி அலட்டிக் கொள்ளக்கூடாது. யார் மாட்டும் அன்பு! இது என் வாழ்க்கையின் தொழிலாக அமைய அருள் செய்க!

இறைவா, எனக்கு ஏன் பகை? என் மீது யார் வேண்டுமானாலும் பகை கொள்ளட்டும். நான் ஏன் பகை கொள்ள வேண்டும். இறைவா, யாருடைய தவறையும் மறக்கும் பெருந்தன்மையை அருள் செய்க!

தீமையை மறத்தல், மன்னித்தல் ஆகிய நற்குணங்களை அருள் செய்க! திறந்த மனம், திறந்த கரம் இவை என்னுடைய வாழ்க்கையின் இயல்புகளாக அமைந்திட அருள் செய்க!

இறைவா, என் சித்தத்தில் இரக்கமும் ஈகையும் இடையறாத இயல்புகளாக நின்று விளங்க அருள் செய்க! இறைவா! நான் பெரிய மனிதனாக வேண்டாம். எளிய தொண்டனாக விளங்க அருள் செய்க!

மற்றவர் மகிழ்ச்சிக்காக நான் துன்புற நேரிட்டாலும் பரவாயில்லை! இறைவா, அருள் செய்க! என் வாழ்க்கை மருந்து மரம் போல அமைந்திட அருள் செய்க!

என் பணி கொள்வோர், என் தலைவர் என்று ஏற்கும் பெற்றியினை அருள் செய்க! பெறற்கரிய பெருந்தகைமையே என் வாழ்வின் குறிக்கோள்! இறைவா, அருள் செய்க!