பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





செப்டம்பர் 1


அந்தஸ்து என்ற ஆணவத்தினின்று விடுதலை பெற்று அருள் காட்சியில் திளைத்திட அருள் செய்க!


இறைவா, தாய்ப் பன்றியாகிப் பன்றிக் குட்டிக்குப் பால் கொடுத்த தலைவா! கொற்றாளாகி மண் சுமந்த கோவே! இறைவா, நீ உயிர்களை ஆட்கொள்ளும் திறத்தில் மிகவும் எளிமையாக நடந்து கொள்கின்றனை! தகுதி பார்ப்பதில்லை!

அண்ணலே! நீ அந்தஸ்து பார்ப்பதில்லை! நானோ அந்தஸ்தின் பேரால் இழந்த உறவுகள் எண்ணிக்கையில் அடங்கா. அந்தஸ்து என்ற பெயரால் நான் அடைந்த இழப்புக்கள் பலப்பல!

இறைவா! அந்தஸ்து - தகுதி இவை என்னுடைய உய்திக்குத் தடையாய் உள்ள பந்தங்கள்! இவை என்னைப் பொய்ம்மை நிறைந்த ஒழுக்கத்துக்கு இரையாக்கிக் கெடுத்து விட்டன!

அந்தஸ்து:- இது மிகவும் கொடுமையான பந்தம். அன்பைக் கெடுப்பது. உறவைக் கெடுப்பது. உய்தியைக் கெடுப்பது. இறைவா, என்னை அந்தஸ்து என்ற பேயிலிருந்து காப்பாற்று! நான் யார்க்கும் எளியனாக வாழ அருள் செய்க!

நான் யார்க்கும் தொண்டனாகத் தொண்டாற்ற அருள் செய்க! அந்தஸ்து என்ற பொயம்மையால் நான் கெட்டது போதும்! அந்தஸ்து என்ற பொய்ம்மையைப் போக்கி யாண்டும், யாரிடமிருந்தும் அறிவை இரந்து பெற்றிட அருள் செய்க!

இறைவா, நானும் எளியருக்கு எளியனாக அடைந்து அணைந்து அவர்தம் ஏவலை என் தலைக்கடனாக ஏற்றுச் செய்ய அருள் செய்க! அந்தஸ்து என்ற ஆணவத்தினின்று விடுதலை பெற்று அருட் காட்சியில் தங்கிட தொண்டுலகில் வாழ்ந்திட அருள் செய்க! இறைவா, அருள் செய்க!