திருவருட்சிந்தனை
271
இறைவா, வான் பழித்து இம்மண் புகுந்த புனிதனே! போற்றி! போற்றி!! என் வாழ்க்கை ஒரு தொடர்கதையாக நீள்கிறது.
இறைவா, என் வாழ்க்கை மயக்க நிலையிலும் ஒரோ வழி தெளிவு நிலையிலும் நகர்த்து கொண்டிருக்கிறது! என் வாழ்க்கை ஒரு போராட்டக் களமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!
அம்மம்ம! எத்தனை வகையான போராட்டங்கள்! ஒன்றோடொன்று ஒவ்வாத பொறிகளுடன் போராட்டங்கள்! மயக்க நிலையில் தீதை நன்றெனத் தழுவி நின்றதால் விளைந்த போராட்டங்கள்! இறைவா, இப்படிச் செல்லும் என் வாழ்க்கையின் முடிவுதான் என்ன?
இறைவா, இவ்வளவு நீண்ட போராட்டங்களுக்குப் பிறகும் நான் இன்னும் என் வாழ்க்கையின் இரகசியத்தை அறிந்தபாடில்லை! உணர்ந்தபாடில்லை! இறைவா, இந்த உலக வாழ்க்கையின் நோக்கம் என்ன? இரகசியம்தான் என்ன? இறைவா, என் வினாவை என் பக்கமே திருப்பி விடுகின்றாயா?
வாழ்வின் இரகசியம் போகம் அன்று! வாழ்க்கையில் நிகழும் அனுபவத்தின் மூலம் கல்வி பெறுவதேயாகும். இறைவா, எனக்கு ஏது அனுபவம்! ஏதோ வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகின்றேன்! இறைவா, இந்த உலக நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்கும் உளப் பார்வையை எனக்கு அருள் செய்க!
இறைவா, என் வாழ்க்கைப் போராட்டத்தில் என்னுடைய பணியின் மீது ஒரு சுழற்காற்று வந்து மோதினாலும் நிலைத்து நிற்கும் இயல்பினை அருள் செய்க! மயக்க நிலை வேண்டாம். தெளிவு தந்து அருள் செய்க.