பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

273






செப்டம்பர் 13


என் கால்கள் சொந்த வலிமையில் ஊன்றி நிற்க அருள் செய்க!

இறைவா, நின் திருவடிகள் வாழ்க! வாழ்க! இறைவா, நின் திருவடிகள் மன்னுயிர் காக்கும் தாளாண்மையிலேயே நோன்பாக ஏற்றுள்ள திருவடிகள்! நின் திருவடிகளே உலக இயக்கத்தைச் செய்கின்றன. அடியோங்களைத் தாங்குகின்றன.

இறைவா, என் கால்கள் தாளாண்மையில் முற்றாக ஈடுபட்டால் நல்வாழ்வு கால்கொள்ளும். உடல் நலமும் விளங்கும். இறைவா, என் கால்கள் ஓயாது நடக்கவேண்டும். எங்கு? ஏழைகளின் வீடுகளை நோக்கி நடக்க வேண்டும். நின் திருக்கோயிலைச் சுற்றி வலம் வரவேண்டும்.

வழி வழி கால்கொள்ளக் கூடிய நாகரிகத்தினைப் படைத்திடுதல் வேண்டும். நல் நடைக்கும் என் கால்கள் அரண் செய்யவேண்டும். இறைவா, அருள் செய்க என் கால்களின் வலிமையில் நான் நிற்க வேண்டும்! இறைவா, பொய்க்கால் கூடாது. நான் உழைப்பில் தற்சார்புடையவனாக இருப்பது அவசியம்.

இறைவா, நான் என் வாழ்வினை நடத்தும் தகுதியில் தரத்தில் என் கால்களையே சார்ந்திருத்தல் வேண்டும். இறைவா, என் ஒழுக்கம் வலிமை வாய்ந்தகாக என் சார்பினதாக இடம் பெறுதல் வேண்டும்.

இறைவா, என் கால்கள் நடக்கட்டும். நன்னெறியில் நடக்கட்டும்! இறைவா, என் கால்கள் நின்திருக்கோயிலைச் சுற்றி வலம் வரட்டும்! என் கால்கள் பொருளிட்டத்திற்கும் உழைக்கட்டும். இறைவா, நான் என் கால்களால் ஊன்றி நிற்க அருள் செய்க!

கு.x.18