பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

279






செப்டம்பர் 19


தப்பெண்ணம் இல்லாது வாழ்ந்திடும் பேற்றினை அருளுக!

இறைவா, என்னை ஆட்கொண்டருள் முடியும் என்ற நம்பிக்கையுடன் என்னைத் தொடரும் தலைவா! என்னை நீ எடுத்தாள முடியுமா? இறைவா, நான் தப்பெண்ணங்களின் வழிப்பட்டு, ஐயப்பட்டு உழல்கிறேன். நான் தப்பெண்ணங்களின் கொள்கலம். அதனால் நான் அகந்தை உணர்வுடன் போட்டியிடுகிறேன்.

இறைவா, "நான் சொல்வதே சரி செய்வதே சரி!” என்ற முடிவுக்கு ஒத்திசையாதவர்கள் எனக்கு வேண்டாதவர்கள் என்று அவர்கள் மீது தப்பெண்ணம் குடிகொண்டு விட்டது. தப்பெண்ணம் உடல் நலத்தைக் கெடுக்கிறது.

என் உடல்நலம், அறிவு, உணர்வுகளை, எல்லாம்கூட தப்பெண்ணம் கெடுத்து விடுகிறது. நண்பர்களைப் பகைவர்களாக்கிவிடுகிறது. ஏன்? மற்றவர் சொல்வதைக் கேட்டது இல்லை என்ற முடிவில் என் மனம் தாழ்ப்பாள் போட்டுக் கொள்கிறது.

இறைவா, நீ தப்பெண்ணங்களுக்கு அப்பாற்பட்டவன். நீ பஸ்மாசுரனைக் கூடத் தப்பாக எண்ணவில்லை. இறைவா, நானோ ஒரு சந்தேகப் பிராணி, தப்பெண்ணங்களே என் முதல். தப்பெண்ணங்களை நான் தற்காப்பு என்று எண்ணுகிறேன். இது தவறு.

இறைவா, நான் நன்றாக எண்ணி நம்பிக்கையோடு நாலுபேருடன் வாழ்ந்தாலே போதும். நான் வெற்றி பெறுவேன் இறைவா, தப்பெண்ணம் இல்லாது வாழ்ந்திடும் பேற்றினை அருள் செய்க!