பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

281






செப்டம்பர் 21


அன்பைப் பொழிந்து அன்புலகமாக்க அருள்க!

இறைவா, என்னுடைய அன்பே ! நின் திருவடிகள் போற்றி! இன்ப விழைவினாலேயே வாழ்க்கை நிகழ்கிறது. எல்லா உயிர்களுக்கும் இன்பமே விழைவு நோக்கம். இன்ப நுகர்வே, இந்த உலக இயக்கத்திற்கு உந்து சக்தி.

இன்ப விழைவினாலேயே அறம் செய்யப் பெறுகிறது. வாழ்க்கையின் பயனே இந்த அன்புதான். இறைவா, இந்த இன்பத்துக்கு முதல் எது? உந்து சக்தி எது? இறைவா, நன்றருளிச் செய்தனை.

இன்பத்திற்கு முதல் அன்பு இன்பத்திற்குக் காரணம் அன்பு. அன்பு தழீஇய வாழ்க்கை இன்பத்தைத் தரும். காரைக்கால் அம்மையார் விழைந்ததும் இன்ப அன்பே. அன்புக்கு வாயில்கள் எண்ணற்றன. உண்டு. இறைவா, நான் அன்பின் வழியில் வாழ்ந்திடும் வழக்கத்தை அருள் செய்க! இறைவா, என் அன்பு ஆற்றலுடையதாக அமைதல் வேண்டும்.

இறைவா, கனிந்த அன்பால்-காரண காரியத்தை ஆய்வு செய்யும் அறிவு அழிதல் வேண்டும். இறைவா ஏன்? உன்னையே நான் அன்பினால் வழிபாடு செய்தல் வேண்டும். இறைவா அருள் செய்க.

நான் அன்பிலே பிறந்தேன். அன்பிலே வாழ்கின்றேன். நான் அன்பை என்னைச் சுற்றி-உலகத்தில் பொழிந்து இந்த வையகத்தை அன்பு உலகமாக்குதல் வேண்டும்.

யாண்டும் அன்பு! யார் மாட்டும் அன்பு! அன்பே இன்பம்! அன்பே ஆற்றல்! அன்பே சிறப்பு! அன்பே குடும்பம்! அன்பே வழி! அன்பின் வழியது என் வாழ்வு. வளம் எல்லாம்! இறைவா, அருள் செய்க!