பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

283






செப்டம்பர் 23


இறைவா ஒற்றுமைப் பண்பை வழங்கியருள்க.

இறைவா, களிற்றுரிவை போர்ந்த அண்ணலே! எனக்கு வலிமை தேவை. பலம் தேவை. ஆம், இன்று தேவை! இறைவா, நீயோ சிரிக்கிறாய். எனக்கோ வேதனையாக இருக்கிறது. வெட்கமாக இருக்கிறது. "ஏன் அப்படி?” என்று கேட்கிறாய்.

இறைவா, ஏன் இப்படி நடிக்கின்றாய், ஒன்றும் தெரியாதவன் போல! தலைமுறை, தலைமுறையாக நானும் என் உறவினரும், சுற்றத்தினரும் வறுமையில் வாடி, புலன்கள், பொறிகளை இழந்து வருகின்றோம்.

எத்தனை தலைமுறையாகச் சாதிச் சண்டைகளால் பண்பாடழிந்து வருகின்றோம். நடைபெற்றுள்ள கொலைகள் எத்தனை? இறைவா, போதும், போதும், இந்த நரக வேதனை. எனக்கு வலிமையைத் தா. எங்களுக்கு வலிமையைத் தந்தருள் செய்க!

ஒற்றுமையே வலிமை, வலிமையே ஒற்றுமை. ஆம் எங்களுக்குள் வேற்றுமையில்லை. பிரிவினை இல்லை. எங்களை எந்தச் சக்தியாலும் பிரிக்க இயலாது. இறைவா, ஒற்றுமைப் பண்பை வழங்கியருள்க!

நான் எளியன்! வேறு யாரினும் உயர்ந்தவன் அல்லன்; என் வாழ்க்கை, மற்றவர்களுக்காகவே, மற்றவர் வாழ்க்கையே என் வாழ்க்கை மற்றவர் மகிழ வாழ்தலே என் கடமை. இந்த நிலை எய்திட அருள் செய்க!