பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

285





செப்டம்பர் 25


ஒருமையுணர்வுடன் உலகியல் நடத்த அருள்க!


இறைவா, "ஆ, வா!" என அருளி ஆண்டு கொண்டருளும் தலைவனே! போற்றி! போற்றி! என் வாழ்க்கையில் வளர்ச்சி, இன்பம், அமைதி இவ்வளவும் அமையவேண்டும்.

மனிதகுல வாழ்வியலை இயக்குவது உலகியல்! ஆதலால் என் வாழ்க்கை சீராக அமையவேண்டுமெனில் நான் உலகியலைத்தான் அணுகவேண்டும். நான் வாழும் உலகியல் செப்பமாக அமைந்தால் என் வாழ்க்கையும் செப்பமாக அமையும்!

இறைவா, உணர்ந்தேன்! உலகியல் செப்பமாக இல்லாமையினால்தான் அறிஞர்களை, அருளாளர்களை இந்தப் "பொருந்தா உலகியல்" கொன்றுவிட்டது!

இந்த உலகியலை ஒருவர் நடத்தக்கூடாது; நடத்த அனுமதிக்கக்கூடாது. பலர் கூடி நடத்த வேண்டும்! அவருள்ளும் ஒரே வகையினராக இருந்தால் வளர்ச்சி இருக்காது! புத்தறிவுக்கு வழியில்லாமற் போய்விடும்! இறைவா, என்னோடு ஒத்தார் பலர் இருந்து நடத்துதல் வேண்டும்.

என் வாழ்க்கையில் பங்கு பெறுபவர்கள் ஒத்தாராக இருந்தால்தான் எனக்கு அவ்வப்பொழுது எடுத்துக்கூற இயலும். நான் வளர வேண்டியவன். உயரவேண்டியவன். ஒத்தாரோடு மட்டுமே உறவானால் உயர்வு இல்லை. ஆதலால், உயர்ந்தாருடனும் கூடி உலகியலை நடத்த வேண்டும். அப்போதுதான் என்நிலை உயரும்.

என் வாழ்க்கையில் அன்பு, இரக்கம் முதலியன ஊற்றெடுத்து என்னை வளர்க்க, தாழ்ந்தாரும் என்னுடன் உலகியலில் பங்கேற்க வேண்டும். நான் எல்லை கடந்த நிலையில் யாரையும் ஒதுக்காமல் ஒதுங்காமல் வளர வேண்டும்.

அன்புக்கும் உறவுக்கும் எல்லையில்லை. ஆதலால், அனைவரும் என்னுடன் சேர்ந்து உலகியல் நடத்தினால் எனக்கு உயர்வு கிடைக்கும். இறைவா, அருள் செய்க!