பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

287






செப்டம்பர் 27


இறைவா, உள்ளென்றும் புறமொன்றும் இல்லாத திறந்த மனத்தினை அருள்க!

இறைவா, தூயவெள்ளேறுடையானே! என் மனம் நீ எழுந்தருளும் திருக்கோயிலாக விளங்க வேண்டும். இது என் ஆசை. ஆனால், என் ஆசை எளிதில் நிறைவேறாதுபோல் இருக்கிறதே.

இறைவா, என்மனம் தூய்மையாக இல்லை. வெண்மையாக இல்லை. ஏராளமான செய்திகள் இரகசியம் என்ற பெயரில் அங்கு உள்ளன. அவைகளை மற்றவர் அறிய நான் கூறுவதில்லை.

என்னுடைய வாழ்க்கையில் ஒளிவு, மறைவுகள் அதிகம். இதற்கு ஏதேதோ காரணம் சொல்லி என்னை நானே ஏமாற்றிக் கொள்கின்றேன். இறைவா, நான் என்ன செய்ய? இங்குள்ள சூழ்நிலையில் உண்மை சொன்னால் உலகம் பைத்தியக்காரன் என்ற பட்டம் கட்டிவிடும். வாழத் தெரியாதவன் என்று எள்ளி நகைக்கும். இது இன்று என்னுடைய நிலை.

இறைவா, நீயோ திறந்த மனத்துடன் வாழ்பவர் களையே நேசிக்கிறாய். விரும்பி ஏற்றுக் கொள்கிறாய், எனக்குத் தூய்மையான மனத்தினைத் தந்தருள் செய்க! உள்ளொன்றும், புறமொன்றும் இல்லாத திறந்த மனத்தினை அருள் செய்க!

என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் போல விளங்க அருள் செய்க! கள்ளமற்ற திறந்த மனம், இன்பம் தழீஇய சொற்கள், மனம் திறந்த பேச்சு இவற்றை என் வாழ்க்கையின் நியதிகளாக ஏற்றுக் கொள்ள அருள் செய்க!

இறைவா, திறந்த மனம் உனது அருட் கொடை; நீ விரும்பி நேசிப்பது. இறைவா, திறந்த மனத்தினை அருள் செய்க!