பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

291






அக்டோபர் 1


இறைவா, என் வாழ்வை வளமார்ந்த அருட்சோலையாக்கி அருள் செய்க!

இறைவா, நன்னெறியே! நெறியின் பயனே! நின் திருவருள் போற்றி! போற்றி! இறைவா, ஓர்மை! ஓர்மை என்ற சொல் தரும் பொருள், பயனுடையது. என் வாழ்க்கை வாழ்க்கையின் வார்த்தைகள், செயல்கள் நீரில் குமிழியென ஆகாமல் நிலைத்தன்மையுடையனவாக அமைதல் வேண்டும்.

என் வாழ்க்கையின் குறிக்கோளில் ஒருமை வேண்டும். குவிந்த கதிரொளி மிகு ஆற்றலுடையது. மழை நீர்த்துளிகளே திரண்டு பெரு வெள்ளமெனப் பாய்ந்து பயன்படுகின்றன. பல நூறாயிரம் காசுகள் கூடி ஒன்று சேர்ந்தால்தான் செல்வம்.

செல்வமே மனித வாழ்க்கைக்கு முதலாக அமையும். அதுபோல என் ஆற்றல், ஒரு குறிக்கோளில் ஒருமைப்படுத்தப்பெற்றுப் பாடுறுதல் வேண்டும்.

ஒரு மனம் வேண்டும். இறைவா, என்ன சிரிக்கிறாய்? இல்லை இறைவா! எனக்கு இருப்பது ஒரே மனந்தான்! ஆனால் அது அடிக்கடி மாறுபட்டுத்திரிவது ஆற்றொணாத் துயரத்தைத் தருகிறது.

நட்டம்-ஈட்டம் என்ற சுருக்குக் கயிறுகள் என்னை இழுத்து அலைக்கழிவு செய்கின்றன! எவ்வளவு மோசமாகி இருக்கிறேன். ஆதாயம் இருந்தால்தான் நான் செயல்படுகிறேன்.

முறைகேடான ஈட்டம் கருதியே வாழ்தல், பழகுதல் விபசாரம் அல்லாமல் வேறு என்ன? இறைவா, என்னைக் காப்பாற்று.

என் வாழ்க்கை நன்னெறியில் நடைபயிலுதல் வேண்டும். தட்டம்-சட்டம் பற்றிக் கவலையில்லை. என் வாக்கினை வாய்மையாக்கி, வாழ்வை வளமார்ந்த அருட் சோலையாக்கி அருள் செய்க!