பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

293






அக்டோபர் 3


இறைவா, அமைதியை அருள் செய்க!


இறைவா, உனது மறு பெயர்கள்-அமைதி, இன்பம் என்பன ஆனால் இறைவா! உன்னை நான் அமைதியாகக் கண்டு ஆராதித்தேனில்லை. இன்பமாக நினைந்து ஏத்திப் புகழ்ந்தேனில்லை.

ஆம், இறைவா! அமைதியின் தரிசனம் கிடைப்பதே இல்லை. எங்கு நோக்கினும் பதற்றநிலை! பழைய காட்டுமிராண்டிகளைப் போலவே அடுதலும் தொலைதலும் நிகழ்கின்றன. இந்த நிலை வீட்டிலிருந்து நாடு வரை உள்ளது!

இறைவா, இந்தக் கலக உலகை மீட்டு அமைதிக்குக் கொண்டு வர வேண்டாமா? ஆம் இறைவா! நிச்சயம் கொண்டுவர வேண்டும்!

ஆழ்ந்த அறிவிலேயே அமைதி தோன்றும். தெளிவான சிந்தனையிலேயே அமைதி தோன்றும். தன்னல மறுப்பிலேயே அமைதி தலைகாட்டும். பிறர்க்கென முயலும் பண்பிலேயே அமைதி வந்தமையும். இதுவே நியதி.

அன்பே இன்பம்! இன்பமே அன்பு! அமைதியே வழி பாடு. இறைவா, அமைதியை அருள் செய்க: உலகில் அமைதி நிலவ அருள் செய்க!