பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

297






அக்டோபர் 7


இறைவா, காரியங்களில் முறைப்பாடுகள் அமையும்படி அருள்க!



இறைவா, குறைவிலா நிறைவே! கோதிலா அமுதே! நின்னருள் போற்றி! போற்றி!! இறைவா, நின் இயல்பில், நின் தொழிலில் சிறப்பான முறைப்பாடுகள் அமைந்துள்ளன.

இறைவா, நின் அமைவு பொருந்திய முறைப்பாடுகள் வியப்பிற்குரியன! ஆனால், நின் தொழிலில் அமைந்துள்ள முறைப்பாடுகளை அனுபவிக்கும் நான், என்வாழ்க்கையில் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ள முயற்சி செய்வதில்லை.

முறைப்பாடுகள் இல்லையானால் முன்னேற்றம் ஏது? இறைவா, நான் செய்யவேண்டிய பணி எது? அந்தப் பணியின் பல்வேறு கூறுகள் என்ன? அந்தப்பணி நடைபெற வேண்டிய பல்வேறு காலக் கட்டங்கள் என்ன?

பணிகளைத் தொகுத்தும் வகுத்தும் முறைப்படுத்திக் கொண்டால் நான் ஏராளமான பணிகளைச் செய்ய இயலும். காலத்திலும் செய்யக்கூடும். யாதொரு இழப்பும் வராமல் செய்யக்கூடும். அப்படியா இறைவா?

என் பணிகள் முறைப்படுத்தப்பட்டு விட்டால் பணிகளில் அளவுகூடக் குறையும். என் ஆற்றல் மிஞ்சும். உழைப்பும் குறையும். அதே போழ்து நிறைவு பலவும் கிடைக்கும். இறைவா, நன்றருளிச் செய்தனை!

என் பணிகளில் முறைப் பாட்டினை ஏற்றுக் கொள்ள அருள் செய்க! என் வாழ்க்கையில் அமையும் முறைப்பாடுளே என் வெற்றியை நிர்ணயிக்கின்றன. இறைவா, அருள் செய்க!

இறைவா, நான் மேற்கொள்ளும் சிறிய, பெரிய காரியங்களில் முறைப்பாடுகள் அமையும்படி அருள் செய்க!