பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட் சிந்தனை

19


ஜனவரி 3
கூட்டலே-மனித நிலையில் அறம்

இறைவா! கணிதம் எனக்கு அவ்வளவாக வராது. ஆனால் கணிதத் தத்துவங்களின் அருமையை என்னென்று புகழ்வது? இறைவா, கூட்டல், ஆம். நாம் நாள்தோறும் வாழ்க்கையின் ஆதாரமாக அமைந்துள்ள அறிவைக் கூட்டிக் கொள்ள வேண்டும். அது மட்டுமா? இறைவா! தனி "மனிதன்” அம்மம்ம! நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது! இந்தத் தனிமனிதன் என்ற நஞ்சிலிருந்து தானே, தனி உடைமை பிறந்தது. தனி உடைமை உணர்வு தானே, களவும், காவலும், பூட்டும் சாவியும், போரும் இன்றி வாழ்ந்த பொதுமை நலம்மிக்க சமுதாயத்தைச் சீரழித்துவிட்டது. ஏராளமான பிரிவினைகள், பிரிவினை உணர்வுகளால் ஏற்படும் மோதல்கள். பயன், வறுமை நிறைந்த சமுதாயம் !

ஆதலால், "தனிமனிதனாக" வாழலாம் என்ற தன்னல நயப்பிலிருந்து விடுதலைபெறப் பலரோடு கூடி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். பலர் கூடித்தொழில் செய்வதன் மூலமே செல்வம் பெருகும். அன்பெனும் தண்ணளி ஊற்றெடுக்கும். மரங்கள் அடர்ந்து வளர்ந்ததே காடு; காடுகளே மழை பொழியத் துணைசெய்யும். அதுபோல இதயத்தால் ஒன்று பட்ட பலர் கூடி வாழ்தலே சமூகம்; சமுதாயம். இத்தகு சமுதாய அமைப்பே வளம் பல படைக்கும். இன்ப நலன்களைத் தோற்றுவிக்கும்.

இறைவா, பலரோடு கூடிவாழும் பண்பாட்டைக் கற்றுத்தா, மற்றவர் நலத்தை என் நலமாகக் கருதும் உயர் ஒழுக்கத்தினை ஏந்த அருள் செய்! இறைவா, கூட்டமாகக் கூடிவாழக் கருணை பாலித்திடு! அதுவும் அர்த்தமுள்ள கூட்டமாகக் கூடி வாழவேண்டும். இறைவா, எந்தச்சூழ்நிலையிலும் மனிதர்களைக் கழித்துக் கட்டும் இழிநிலை எனக்கு வேண்டாம். மனிதநிலையில் கூட்டலே அறம். இறைவா அருள் செய்க!