பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

299





அக்டோபர் 9


என் இதயத்தை உன் கோயிலாக்குகிறேன்! இறைவா, அருள் செய்க!


இறைவா, இந்த மனிதன் உனக்கு எத்தனை கோயில் களைக் கட்டியிருக்கிறான்! எத்தனை “கும்பாபிஷேகங்களை” நடத்தியிருக்கிறான்! எத்தனை கோடி மந்திரங்களை ஜெபித்திருக்கிறான்! ஏன் இறைவா, இன்னும் மக்களைச் சுற்றித் துன்பங்கள்?

மனிதன் செய்யும் செயலெல்லாம் மனிதனின் புகழ் வேட்டைக்கும் பொருள்வேட்டைக்கும்தான் பயன்படுகின்றனவா? இறைவா, அப்படியானால் நீ கோயிலில் எழுந்தருளவில்லையா?

"சாதிப் பிரிவுகளின் ஆணவம், பண வியாபாரம், ஏழை மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் முதலாளியின் கொலு விருக்கை, பெருமை-சிறுமைப் போராட்டங்கள் முதலியன கோயிலை ஆட்சி செய்யும் வரை அங்கு எனக்கு என்ன வேலை" என்றா கூறுகிறாய்? இறைவா, மன்னித்து விடு. என் இதயத்தை உன் கோயிலாக்குகிறேன்!

அன்பால் என் இதயத்தை மெழுகி நீ எழுந்தருளும் திருக்கோயிலாக்குகிறேன்! தொண்டால் நின்னை வழிபடுகின்றேன்! உயிர்க்குலத்தின் மகிழ்வை உனக்கு நிவேதனமாகப் படைக்கின்றேன்.

இறைவா, நின்னைக் காட்டும் மந்திரம் அன்பு! இறைவா, நின்னை அடையும் வழி, தொண்டு! இறைவா, நின்னை அனுபவிக்கும் முறை அர்ப்பணிப்புணர்வுடன் செய்யும் பணி. தெளிவு பிறந்தது. இந்த வாழ்க்கைக்கு என்னை ஆளாக்கு.

நான் நின் நெறிவழி நிற்பேன். அறியாமையாலும் பழக்க வாசனையாலும் தவறுகள் செய்தால் என்னை அடித்துத் திருத்து. மறந்து விடாதே! இறைவா, பிரிந்து விடாதே! உன் பிரிவு எனக்குத் தாங்கொணாத் துயரம் தரும். இறைவா, என் இதயம் உன் கோயிலாக அருள் செய்க!