பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



300

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



அக்டோபர் 10


இறைவா! பாராட்டில் மயங்காத பண்பாட்டைத் தா!

இறைவா, ஆயிரம் தடவை எண்ணுகிறேன், நல்லன பற்றி! ஆனால், ஒரு தடவை கூட வாழ முயலுகின்றேன் இல்லையே! இறைவா, ஏன் இந்தத் தீயூழ்? உனக்கு இரக்கமில்லையா? என்னைத் திருத்தக் கூடாதா?

பொல்லாத தன்னல நயப்பிலிருந்து விடுதலை பெறாத வரையில் நல்லவனாகவாழ இயலாதா, இறைவா. நானும் தன்னல நயப்பிலிருந்து முற்றாக விடுதலை பெறவே விரும்புகிறேன்! அதற்காகவே பேசுகிறேன். எழுதுகிறேன். கூட்டுறவாளனாகத் தொண்டு செய்கிறேன். இறைவா, என்ன சொல்கிறாய்?

நான் இவ்வளவு பணி செய்தும், பாராட்டில் மயங்குவதும், பெருமைபடப் பேசப்படுவதைக் கேட்பதிலும் இச்சை இருக்கிறதே!

இறைவா, இந்த இச்சைகளிலும் எனக்குப் பெரு விருப்பம் இல்லையே! விருப்பத்தில் பெருவிருப்பம் என்ன? சிறு விருப்பம் என்ன? கூரையில் பெரு நெருப்பு விழுந்தால் தான் தீப்பிடிக்குமா? சிறு நெருப்பு விழுந்தால் தீப்பிடிக்காதா? கவனத்தில் கொண்டேன்.

என்னைப் பாராட்டுபவர்கள் பக்கம் மறந்தும் சார்ந்து இருக்க மாட்டேன். ஆம், இறைவா, எனக்கு வேண்டியவர்கள், உதவி செய்பவர்கள்-பாராட்டுபவர்கள் அல்லர்.

உடனிருந்து உழைப்பவர்களே! உதவி செய்பவர்கள். இத்தகையோரைத் தோழமையாகக் கொள்வேன். கிடைக்காதுபோனால் தன்னந்தனியனாக உழைக்கும் உறுதியைத்தா! சோர்ந்தால் நீ தெம்பு கொடு. ஆற்றுப்படுத்து! இறைவா, அருள் செய்க!