பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



302

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



அக்டோபர் 12


இறைவா, அழுக்காறு அகல அருள் நயக்கும் வாழ்வினை
அருள் செய்க!

இறைவா, உயர் மலைகளில் எழுந்தருளியுள்ள இறைவா! படிகளைக் கடந்து நின் சந்நிதிநோக்கி ஏறி வரும்பொழுது கால் கடுக்கிறது. ஆனாலும் ஏறியபிறகு உன் அழகிய திருக்கோயிலில், நீ வழங்கும் அருள், உடல் நலம், உயிர் நலம், உணர்வு நலம் அனைத்தும் கிடைக்கின்றன.

வாழ்க்கை, பள்ளத்தில் கிடக்கிறது. குணம் என்னும் குன்று ஏற வேண்டும். அழுக்காறு, அவா, வெகுளி என்னும் பள்ளங்கள், பொச்சாப்பு, பொய்ம்மை, அறியாமை ஆகிய பள்ளங்கள், வறுமை எனும் படுகுழி ஆகியவைகளிலிருந்து கரையேறிக் குணம் என்னும் குன்றேறுதல் வேண்டும்.

உடல்வருந்த உழைத்தல், பிறர் மகிழத் தாம் மகிழ்தல் என்ற நெறிகள் வழி அழுக்காற்றினைக் கடக்கலாம். பிறர் வாழ்க்கையைக் கண்டு தன் தகுதிக்குமேல் அவாவுறுதலைத் தவிர்த்தல் மூலம் அவாவினைக் கடக்கலாம்.

அவா- அழுக்காற்றினைக் கடந்தாலே வெகுளி, இன்னாச் சொல்லினைக் கடக்கலாம். நல்லன நினைந்து பழகுதல் மூலம் பொச்சாப்பினைக் கடக்கலாம். யாருக்கும் தீங்கு செய்யாதிருத்தல் என்ற நெறி வழி பொய்ம்மையைக் கடக்கலாம்.

கல்வி- அனுபவங்கள் மூலம் அறியாமையைக் கடக்கலாம். பொருளினைச் செய்தல் மூலமும் வரவுக்கு மேல் செலவைத் தவிர்ப்பதன் மூலமும் வறுமையைத் தவிர்க்கலாம்.

இறைவா, அழுக்காறு முதலியன அகல, அருள் நயக்கும் வாழ்வினை அருள் செய்! வாய்மை தவறா வாழ்க்கையை அருள் பாலித்திடுக! வறுமையால் சிறுமை தப்பி வளமாக வாழ்ந்திடத் திருவுளம் பற்றுக. குணமென்னும் குன்றேறி நின்று நின் திருவடிக்குத் தொழும்பாய் ஆட் செய்யும் பேற்றினை அருள் செய்க!