பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திருவருட் சிந்தனை

303



அக்டோபர் 13


உழைப்பு ஒரு வேள்வி! இதை முழுமனத்துடன் இயற்றிட
அருள் செய்க!

இறைவா, என்னை இந்த உலகக் கவர்ச்சிகளிலிருந்து காப்பாற்று! துரண்டில்வாய்ப் புழுப்போல நான் இருக்கின்றேன். எனக்குச் சில சுவைகளைக் காட்டுகின்றனர். சில சலுகைகளைக் கூடத் தருகின்றனர். ஆனால், இவற்றால் என்ன பயன்? இறைவா, நான் வாழ வேண்டும். "பிழைக்க” விரும்பவில்லை.

வாழ்வாங்கு வாழ வேண்டும். ஆம் இறைவா. தெளிந்த அறிவு, அசைவிலா உறுதி, பழுதிலா உழைப்பு, பழியிலா ஆக்கம், ஊரவருடன் ஒப்புரவு - இவையே என்னை வாழ்விக்கும். இவைகளை அருள் செய்க.

இன்று அறிவில் நிறைய குழப்பம். நன்றும் தீதும் எளிதில் துணிய முடியாத அளவுக்குப் பொய்ம்மைகளிடையில் வாய்மை. உழைப்பு, பழுதிலா உழைப்பு. உழைப்பு ஒரு வேள்வி. இதை - முழுமனத்துடன் இயற்றுதல் வேண்டும்.

ஆக்கம், செல்வம் தேவை. நிறையத் தேவை! ஆனால், பிறர் உழைப்பைச் சுரண்டிவரும் செல்வம் வேண்டாம். பழிகளைச் சுமந்துவரும் செல்வம் வேண்டாம். அன்பு, நாண், ஒப்புரவு ஆகிய வண்டிகளில் வரும் செல்வமே வேண்டும்.

இறைவா, ஊரவர்களுடன் கூடி வாழ்தல் வேண்டும். கொண்டும் - கொடுத்தும் வாழ்தல் வேண்டும். இறைவா, அருள் செய்க! வாழ்வாங்கு வாழ அருள் செய்க!