பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



304

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



அக்டோபர் 14


இறைவா, பொறிகளின் மீது தனியரசாணை புரிந்திட அருள்க!

இறைவா! "தண்ணீர் அண்டாவில் விழுந்த தவளை போலத் தவிக்கும்” என்னைக் கரையேற்றக் கூடாதா? தவளைக்குத் தண்ணீர் தேவைதான். ஆனால், தண்ணீருக்குள்ளேயே எப்போதும் கிடக்க முடியாதே.

தண்ணீர் ஆசையினால் தவளை அண்டாவினுள் விழுந்து விட்டது. தண்ணீர், அண்டாவில் அடிமட்டத்தில் கிடக்கிறது. அதனால் தவளையால் தாவி வெளியேற முடியவில்லை. ஏறினால் வழுக்குகிறது. ஐயோ பாவம்! நான்துய்க்கலாம்-உய்யலாம் என்ற பெருவேட்கையின் காரணமாகவே வீழ்ந்தேன்.

ஆனால், நான் வீழ்ந்த சமூகம் வளர்ச்சியில்லாத சமூகம். பிரிவினைகளாலும் அழுக்காறு வயப்பட்ட போட்டி களாலும் அலமந்து அழிந்து கொண்டிருக்கும் சமுதாயம். என் தகுதியோ எவற்றிலும் நிறைவில்லாதது! அரைகுறை.

தாவி வளர்ந்து உய்யுமாறு அறியேன். நான் தொடங்கும் முயற்சிகளில் எல்லாம் வழுக்கி வீழ்கிறேன். தவளைக்கு நான்கு கால்கள் இருந்தும் ஏறமுடியவில்லை! எனக்கு மூன்று கால்கள் முழுதாகக் கிடைத்தால் போதும். அறம், பொருள், இன்பம் என்ற கால்களில்தானே, நான் நிற்க வேண்டும்.

அறம், உழைத்து வாழ்தல், வாழ்வித்து வாழ்தல். பொருள், துய்த்தல், பொறிகளார, புலன்களாரத் துய்த்தல். இதில் பொறி களும் புலன்களும் செய்யும் சேட்டைகள் தாங்கொணாதவை. இன்பம் - உள்ளவாறு அனுபவத்தில் இல்லை. எதை எதையோ இன்பம் என்று மயங்கித் துய்க்கிறேன். அந்த இன்பங்களே எனக்குத் துன்பமாய்ப் பின் அமைவதையும் கண்டிருக்கிறேன்.

இறைவா, எனக்கு உண்மையான அன்பு தேவை. தண்ணீர் அண்டாவுள் வீழ்ந்த தவளையானேன். உழைத்து வாழ்வித்து வாழும் வாழ்வினைத்தா! தேவையான பொருள்களை வழங்கு. என் பொறிகளின் மீது தனியரசு செலுத்தும் உரத்தினைத் தா! துன்பமில்லா இன்பத்தினை அருள் செய்க!