பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



306

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



அக்டோபர் 16


தாயிற்சிறந்த தயாபரனே, அருள் செய்க!

இறைவா, நீ ஆணுமல்லன்! பெண்ணுமல்லன்! அலியும் அல்ல. இவைகளைக் கடந்த பேராற்றல் நீ! நின்னை தாய் என்றே நாங்கள் பாராட்டுகின்றோம் ஆம், இறைவா! தந்தை நிலை பெரியதுதான்!

ஆனால், தாயிடம் அனுபவிக்கும் அன்பு-பரிவு தந்தை யிடம் இல்லை! ஏன், பொறுப்புகூட இல்லை. தாய்தான் சுமந்து, நொந்து பெற்று வளர்க்கிறாள்! இறைவா! நான் குழந்தையாக இருக்கும் பொழுது என் தாயே எனக்காக மருந்துண்டாள்! பத்தியம் இருந்தாள்! நீயும் அப்படித்தான்!

எங்கள் பிறவிகெட, நீ மண் மேல் தோன்றினாயே. நின் தயவு தாயினும் சிறந்த தயவு! எனக்கு உடல் தந்து துய்க்கச் செய்தனை. பொன்னும் பொருளும், போகமும் தந்தரு ளினை துய்க்கும் பொருள்களை எல்லாம் வழங்கியுள்ளனை!

உய்யும் நெறியெல்லாம் உய்த்துணரச் செய்தனை: ஒரோவழி என் மீதுள்ள பாசத்தால் கட்டுண்டு துரிசுகளுக்கும் கூட உடந்தையாக இருந்தனை! நின் கருணை அளப்பரிது! என்னைத் தொடர்ந்து வந்து வளர்க்கும் நின்னருளுக்கு கைம்மாறு ஏது?

இறைவா, தாயிற் சிறந்த தயவுடைய தயாபரனே, அருள் செய்க! வற்றாத அன்பு ஊற்றினை அருள் செய்க! கோடி கோடியாகப் பொருள்களை வழங்கு!

இறைவா, தளர்வறியாத மனத்தினைத் தா. நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தா. என்னை மன்னித்தருள். எனக்கு வேண்டுவன எவை என்று உனக்குத் தெரியாதா? எனக்கு வேண்டியதை அருள் செய்க, இறைவா!