பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட் சிந்தனை

307




அக்டோபர் 17
இறைவா, திருவாசகம் ஒதி நின் திருவருள்பெற அருள்க!

இறைவா! பண் சுமந்த பாடலுக்காகப் புண் சுமந்த புண்ணியனே! ஏழை வந்திக்கு, உண்ணும் பிட்டுக்காகக் கொற்றாளாக வந்த கோவே! மாணிக்கவாசகருக்காக குதிரைச் சேவகனாய் வந்த வள்ளலே!

அருமையில் எளிய நின் திருவிளையாட்டு நெஞ்சை உருக்குகிறது; நெகிழ்வினைத் தருகிறது! இறைவா, இன்று ஏன் எனக்காக இந்தத் திருவிளையாட்டைச் செய்யக் கூடாது? மாணிக்கவாசகர் பாடியதுபோல ஊனெலாம் நின்றுருகப் பாட எனக்குத் தெரியாது.

"உன் கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்” என்று சொல்லத் தெரியவில்லை. ஆயினும் இறைவா! ஏழைப் பங்காளா. என்னைக் கைவிடலாகாது. என்னைக் காப்பாற்று.

என்னை ஆட்கொள்ள நீ குதிரைச் சேவகனாக வரவேண்டியதில்லை. புண்ணும் சுமக்க வேண்டியதில்லை. இறைவா, நீ அன்று பெற்ற பரிசு-பண் சுமந்த பாடல்-திருவாசகம் என் கைவசம் இருக்கிறது. திருவாசகம் ஒதும் நினைவினைத் தந்தருள் செய்க! நான் கலந்து பாட அருள் செய்க!

திருவாசகத்தில் நின்றுருகச் செய்யும் அருட் பேற்றினை வழங்குக! திருவாசகம் ஒதி, ஒதி அதன் பயனாக நின்னை என் உடலிடத்தில் பெறுவேன். இதற்கு மேல் யாது வேண்டும்.

"வேண்டத்தக்கது அறிவோய் நீ! வேண்டமுழுதும் தருவோய் நீ!" இறைவா, திருவாசகத்தை நினைந்து நினைந்து அன்பில் நனைந்து நனைந்து ஒத அருள் செய்க!