திருவருட் சிந்தனை
315
அக்டோபர் 25
|
இறைவா, எல்லா உலகமும் ஆனாய் நீயே! என்னைச் சுற்றியுள்ள பூத, பெளதிக உலகமனைத்தும் நீயே! என்னைச் சுற்றியுள்ள இயற்கை உலகத்தில் எவ்வளவு அறிவுச் செறிவு! ஆற்றலின் அடைவு! ஆக்கத்தின் தேக்கம்!
இறைவா, நான் இயற்கையோடிசைந்த வாழ்வினை வாழ்ந்திட அருள் செய்க! என்னைச் சுற்றியுள்ள அனைத்துலகத்திடமிருந்தும் ஆற்றலை ஈர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்! புகழ்மிக்க வாழ்வு வாழ்ந்திடுதல் வேண்டும்!
இந்த உலகை, நான் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இந்த உலகில் நான் முழுமையாக வாழ்ந்திடுதல் வேண்டும். இறைவா, அருள் செய்க!
காய் கதிர்ச் செல்வனின் ஆற்றலும், தண் நிலவின் தண்ணளியும் எனக்குத் தேவை. இறைவா, அருள் செய்க! அறியாமை, வறுமை, பிணி, துவ்வாமை என்றின்னவை இந்த வையகத்திலேயே இல்லாமல் செய்தாக வேண்டும்.
"இன்பமே எந்நாளும் துன்பமில்லை” என்ற வாக்கு உண்மையாக வேண்டும். வாழ்வாங்கு வாழ்தல் உண்மையாக வேண்டும். இறைவா, அருள் செய்க!