பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



316

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



அக்டோபர் 26


இறைவா, வெற்றிகள் நிறைந்த வாழ்வை அருள் செய்க!

இறைவா, ஒங்கி உயர்ந்த திருவுருவில் எழுந்தருளியுள்ள தஞ்சைப் பெரிய திருவுடையவரே! மாமன்னன் இராசராசன் "தேவாரதேவர்” என்று புகழ்ந்து போற்றிய இறைவா!

இறைவா, நீ நடுவுநிலையுடையோனாய் இருத்தல் வேண்டாமா? ஆம் இறைவா! மாமன்னன் இராசராசன் ஆட்சி செய்த முப்பத்திரண்டு ஆண்டுகளில் மாபெரும் காரியங்கள் சாதித்துள்ளானே நின்னருளால்! தனது அரசை "சாம்ராஜ்ய" மாக்கியுள்ளான்! நினக்குத் தஞ்சையில் உலகமே வியக்கும் மாபெரும் கலைக்கோயில் எழுப்பியுள்ளான்! ஆண்ட ஆண்டுகளில் அளப்பரிய காரியங்கள், வாழ்ந்த நாள்களில் விழுமிய பணிகள் செய்து புகழ்மிக்க வாழ்வு வாழ்ந்திட அருள் செய்திருக்கிறாய்!

நானுந்தான் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்துள்ளேன்! ஒரு திருப்பணி கூடச் செய்து முடிக்க முடியவில்லையே! எடுத்த செயலில் எல்லாம் இடையீடுபட்டு எய்த்து நிற்கின்றேனே! இறைவா, இது நீதியாகாது. இறைவா, எனக்கும் முற்றாக அருள் செய்! நின் கோயில் திருப்பணிகள் செய்து முடித்திடுதல் வேண்டும்; நீ மகிழ்ந்து கேட்கும் தேவாரத்தை, நின் பூஜைக்குப் பயன்படுத்தும்படி செய்திடுதல் வேண்டும்.

தமிழினத்தை ஒருகுலமாக்குதல் வேண்டும். இறைவா அருள் செய்க! வெற்றிகள் நிறைந்த வாழ்வை அருள் செய்க!