பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திருவருட் சிந்தனை

21



ஜனவரி 5



இறைவா! பெருக்கமுற வாழ அருள் செய்க!




இறைவா! கணிதத்தில் பெருக்கல். ஆம், இறைவா! வாழ்க்கையிலும் பெருக்கல் தத்துவம் செயற்பட வேண்டாமா? இறைவா, நீயே ஒரு பெருக்கலின் வடிவம் தானே! நின் திருவருள் நோக்கிலிருத்திக் கோடான கோடி உயிரி னத்தை அறியாமையிலிருந்து மீட்டு வாழ்வளித்து உன் புகழ் பாடும் வண்ணம் செய்திருக்கிறாயே!

ஆம், இறைவா! நானும் என் அறிவை நாள்தோறும் முயன்று கற்றும்கேட்டும் பன்மடங்கு பெருக்கிக் கொள்ள வேண்டும். எண்ணற்ற காரியங்களைச் செய்ய வேண்டும்! என் ஆற்றலையும் பல மடங்கு பெருக்கிக் கொள்ள வேண்டும். என் செல்வமும் ஒன்றுக்குப் பலமடங்காகப் பெருக வேண்டும்! இது பேராசையல்ல! நான் மனிதகுலத்தை வறுமையிலிருந்து மீட்க வேண்டாமா? என்னுடைய தோழர்களை மகிழ்வோடு வாழவைக்க வேண்டாமா? ஆதலால், நிறைய செல்வத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்! இறைவா, என் இதயமும் இதயத்தில் ஊற்றெடுக்கும் அன்பும், பெருகியதாக விளங்க வேண்டும். அன்பின் பெருக்கு மனித குலத்தைப் பிடித்திருக்கின்ற அத்தனை இழிவுகளையும் அடித்துக் கொண்டு செல்லவேண்டும்! இறைவா, பெருக்கல் கணக்கில் எண், பன்மடங்காகப் பெருகி வளர்வதைப் போல என் அறிவு, ஆற்றல் செல்வம், அன்பு, தோழமை முதலியன பெருகி வளர வேண்டும்!

இறைவா, கற்றது போதும் என்ற முட்டாள் தனத்தை அறவே ஒழிக்க வேண்டும்! அன்பெனும் ஆறு, சாதி, சமய வாய்க்கால்களில் பாயாமல் மனித குலத்தை நோக்கிப் பேராறாகப் பெருக்கெடுத்துப் பாயவேண்டும். ஆம், இறைவா! எல்லாவற்றையுமே பெருக்கி வாழ்ந்தால் தானே, வளரும் உலகத்திற்கு ஈடுகொடுக்க முடியும். இறைவா, அருள் செய்! பெருக்கமுற வாழ அருள் செய்!