பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

318

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





அக்டோபர் 28


இறைவா, மற்றவர் மகிழும் பணிகளில் ஈடுபடும்
வரத்தினைத் தா!

இறைவா, மூலநோய் தீர்க்கும் முதல்வா! அழுக்காற்றிலிருந்து என்னைக் காப்பாற்று. அழுக்காறு அன்புக்குப் பகை, நட்புக்குப் பகை, ஆக்கத்திற்குப் பகை. இந்த அழுக்காறு ஏன் எனக்கு?

பிறர் வாழ மகிழும் மனம் கிடைத்தால் போதும்! இறைவா, நீ அன்பின் திருவுரு! மனித குலத்தை நேசிக்கும் அன்பினை வழங்கு! பிறர் இன்புறுவது. தான் இன்புறுவது என்று கருதி வாழ்தல் வேண்டும்.

நான் பிறர் நலம் நாடுவதையே உயிர்நோன்பாக ஏற்றுக் கொள்ள அருள் செய்க! நீலமணிமிடற்றிறைவனே! சமூக வாழ்க்கை வாழ்தல் என்ற நிலை அழுக்காற்றைத் தராது. இன்புற்று வாழும் சிறப்பினை நல்கும்! இறைவா அருள் செய்க!

சமூக வாழ்க்கையை ஏற்று ஒழுகுதலே அழுக்காறுக்கு மருந்து! அழுக்காறற்ற வாழ்க்கை ஆக்கத்தைச் சேர்க்கும்; சுற்றத்தை நல்கும்; இந்த உலக வாழ்க்கையில் சொர்க்கத்தைப் படைக்கும்.

இறைவா, பிறரை வாழவைக்க அறிவறிந்த ஆள்வினையைத் தா! அனைத்துலகமும் எனது உலகம் என்று அணைத்துச் செல்லும் அறப்பண்பினைத் தந்தருள் செய்க!

அழுக்காறற்ற நெறி நயந்த அருள் வாழ்வை அருள் செய்! பிறர் மகிழ்வுறும் செயல்களில் ஈடுபட்டு, உளமாரச் செய்யும் வரத்தினைத் தந்தருள் செய்க!