பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட் சிந்தனை

321



அக்டோபர் 31


நாளும் நின்வழியில் கொல்லாமைநோன்பு ஏற்க அருள் செய்க!


இறைவா, இந்தப் பொல்லாத மனித சாதியொடு எத்தனை கோடி ஆண்டு காலமாகப் போராடி வருகின்றனை! நின் போர்க்குணம் வளர்க! வாழ்க!


இறைவா, நோன்பில் எல்லாம் உயர்ந்த நோன்பு எது? "ஒன்றாக நல்லது கொல்லாமை!” உலகம் முழுதும் கொலை தவிர்க்கப்பெறுதல் வேண்டும். கொலை! அதுவும் நிராயுத பாணியை, பெண்ணை, நல்லவர்களைக் கொலை செய்வது என்பது கொடுமை.


இன்றைய உலக அரசியலிலேயே, அணுகிப் பழகி நம்பிக்கையைப் பெற்று, கொன்று விடுதல் என்பது அரசியல் புத்தியாகிவிட்டது. இது கேவலம், இறைவா! உயிர்க் குலத்தைக் காப்பாற்றுக கொலையிலிருந்து குவலயத்தைக் காப்பாற்றுக.


இறைவா, என் உள்ளத்தில் "கொலை” எண்ணம் வேண்டாம்! இறைவா, அருள் செய்க! என்னுடைய பகைவனைக் கூட கொலை மூலம் சந்திக்க நான் விரும்பவில்லை! இறைவா, இந்த வண்ணமே அருள் செய்க!


கொலை கொடிய மனத்தில் தோன்றுவது. என் மனம் கொலை தழுவும் மனமாக மாறாமல் காப்பாற்றி அருள்க! கொலை செய்பவர்கள் ஏழேழ் பிறப்பிலும் நரகத்தில் ஆட்படுவார்கள். எங்கு வாழ்ந்தாலும் நரக வேதனையை அனுபவிப்பார்கள்.


இறைவா, கொலை' என்ற சொல்லே இல்லாமல் போக வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் யாரையும் கொல்லா மனம் தந்தருள்க! நாளும் நின் வழியில் கொல்லாமை நோன்பு ஏற்க அருள்செய்க!