திருவருட் சிந்தனை
323
நவம்பர் 2
|
அருள் செய்க!
இறைவா, மொழிக்குமொழி தித்திப்பான மூவர் சொன்ன தமிழ் கேட்டருளிய இறைவா! என் சொற்ககளை நின் செவி கேட்கலாகாதா? கருணை புரியலாகாதா? என் செவிக்கு உணவே கிடைக்கவில்லை! வழங்குவாரையும் காண்கிலேன்!
உலகம் "பொருள்” என்று கூறிக்கொண்டு பணத்தின் பின் அலைகிறது! நானோ என் வாழ்வை வளமாக்கும் அறநெறிசார்ந்த உணர்வினைச் சொல்லித் தரும் ஆசிரியர்களை நாடி அலைகின்றேன்!
ஆலமர் செல்வா! அன்று நால்வர்க்கு அறமுணர்த்திய அறவாழி அந்தணனே! மாணிக்கவாசகர்க்குக் குருந்த மரத்தடியில் எழுந்தருளி மறைப் பொருளை அருளி ஆட்கொண்ட திருப்பெருந்துறை இறைவா! என்னை மாணாக்கனாக ஏற்றருளி மறை பொருளை அருளிச் செய்து, உய்வைத் தருதல் வேண்டும்!
செம்பொருளே, செம்பொருளின் பயனை எடுத்துக் கூறி, ஆட்கொண்டு பிறவியை நீக்க வேண்டும். பிரணவத்தின் பொருள் ஈதென விளக்கி என் பிறப்பைப் புனித மடையச் செய்தருளல் வேண்டும்.
இறைவா, ஆலமர் செல்வா! அண்ணலே அருள் செய்க! மறையை மறையின் பொருளை, அறிந்து ஓத அருள் செய்க!