பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

327



நவம்பர் 6


வழிவழிவரும் வாழ்வியலமைப்பை அடுத்த தலைமுறை
யினருக்குப் பாதுகாத்தளிக்கும் ஆற்றலை அருள்க!


இறைவா, துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவித்தருளும் என் தலைவா! "கடன்", "கடமை” என்ற சொற்களின் பொருள் எல்லை, இன்று குறுகிவிட்டது! இல்லை, உண்மையான பொருளும் வழக்கில் இல்லை.


இறைவா, இன்று நான் துய்த்து மகிழ்ந்து வாழும் மொழிகள், பொருள்கள், திருக்கோயில்கள் அனைத்தும் எனக்கு முன்னே பல நூற்றாண்டுகள் வாழ்ந்தவர்கள் முயன்று செய்து வைத்துவிட்டுப் போனவைகளே! அவற்றைத் துய்த்து மகிழ்கின்றேன்!


இன்றைய வாழ்க்கை முறை எவ்வளவோ உயர்ந்து விட்டது. பண்டு இருந்த துன்பங்கள் இல்லை. இந்த அளவுக்கு வாழ்க்கை எளிமையாகவும் இன்பந்தரத் தக்கதாகவும், முன்பு ஒரு நாளும் அமைந்ததில்லை.


பல நூறு ஆண்டுகள் துன்பப்பட்டு மனிதகுலம் வாழ்ந்த இயக்கிய வரலாற்றின் பயனே இந்த வாழ்க்கை இலக்கியம், கலை அனைத்தும் அப்படியே! இன்றைய திருக்கோயில்கள் உயிரனுபவத்திற்குரிய பண்ணைகள்!


இத்திருக்கோயில்களை முன்னம் பலர்கூடி, கட்டி, இன்று நம்முடைய அனுபவத்திற்குத் தந்துள்ளனர். ஆதலால், வழி வழி தரும் சமுதாய அமைப்பில் இன்று வாழ்வோர், சமுதாயத்திற்குக் கட்டுப்பட்டிருக்கின்றனர்! அது என்ன? நமது வாழ்வுக் களத்தை முன்னே வாழ்ந்தவர்களுக்கு - அமைத்துத் தந்தவர்களுக்குத் திருப்பித்தரப் போகிறோமா? அது இல்லை! இன்றைய வாழ்க்கையமைப்பைக் கேடு செய்யாமல் வளர்த்துப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்குத் தருவதே நமது கடன்.


இறைவா, நான் துய்ப்பன ஒவ்வொன்றையும் என் வழித் தலைமுறையினருக்குப் பேணிப் பாதுகாத்துத் தரும் பொறுப்புணர்வைத் தந்தருள் செய்க!