பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



22

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஜனவரி 6


வகுத்தறிந்து வாழும் கூட்டுறவே இனி என் வாழ்க்கையாகட்டும்!


இறைவா, வகுத்தல்! ஆம், இறைவா, கணிதத்தில் வகுத்தல்! இறைவா, வாழ்க்கையிலும் வகுத்துக்கொடுத்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆம் இறைவா! வாழ்க்கையில் காலம், ஆற்றல் இரண்டையும் முறைப்படுத்தி வகுத்துப் பயன்படுத்தினால் நிறைய காரியங்கள் செய்யலாம். வேலை நேரத்தில் என்ன வேலை செய்யலாம் என்று ஆலோசித்தல் அல்லது எங்கு வைத்தோம் என்று தேடுதல் நல்ல பழக்கமன்று. வாழ்க்கையின் அனைத்துத் துறையிலும் வகுத்தலின் வீச்சு பிரதிபலித்தல் நல்லது. இறைவா, அவ்வண்ணமே அருள் செய்!

இறைவா! செல்வத்தின் பயன் நுகர்வே. கூடி மகிழ்ந்து வாழ்தலே! என்னுடையதுதான் செல்வம் என்பது குருட்டுத் தனமானது சட்டங்களின்படிதான். ஆனால், நியாயப்படி என்னுடையது அல்ல. இறைவா, நம்முடையது. என்னுடைய செல்வத்தை வகுத்துக் கொடுத்தால் வறுமையே மிஞ்சும். நுகர்வுப் பொருள்களை முறையாகத் தேவைக்கேற்ப வகுத்துக் கொடுத்து வாழ்வளித்துப்பின் வாழவேண்டும். வையகம் உண்ண வேண்டும். வையகம் உடுத்த வேண்டும். இறைவா, இங்ஙனம் வகுத்துக் கொடுக்கும் பெருவாழ்வு கிடைத்து விட்டால் எனக்கேது குறை. வகுத்துண்ணும் சமுதாய அமைப்பில் களவு இல்லை; கலகம் இல்லை; சிறைச்சாலை இல்லை.

இறைவா, வகுத்தளித்து வாழ்ந்திடும் வாழ்க்கையை நடத்த அருள் செய்க! தனியே உண்ணும் பழக்கத்தை நான் விரும்பியதில்லை! இனியும் விரும்பமாட்டேன். என்னுடைய வாழ்வில் தனிமை இல்லை. இனியும் இருக்காது. வகுத்தளித்து வாழும் கூட்டுறவே இனி என் வாழ்க்கை! இறைவா! அருள் செய்!