பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

332

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






நவம்பர் 11


இறைவா, இப்பொய்ம்மையான உலக வாழ்க்கையிலிருந்து எடுத்தாள்க!


இறைவா! காரைக்கால் அம்மையை "அம்மை" என்று அழைத்த அண்ணலே! காரைக்காலம்மையார் தலையால் நடந்து கயிலையை அடைந்ததாகக் கூறுவர். நானும் தலைகீழாக நடக்கவே முயலுகின்றேன்.

ஆம். இறைவா! என்னை நாலு வார்த்தை புகழ்ந்து சொன்னால் போதும். அந்தப புகழ்ச் சொற்களை நான் முகமன் என்று எடுத்துக் கொள்வதில்லை. அல்லது ஆர்வ மூட்டும் சொற்களாக எடுத்துக் கொள்வதில்லை.

என்னைப் புகழ்ந்தால் புகழுக்கு உரியவனாகவே ஆகி விடுகிறேன். அதுமட்டுமா? தலை கனத்து விடுகிறது. உடனே உலகியலுக்கு உரிய "நடை" முதலியன இல்லாமல் தலை கீழாக நடக்கிறேன். நீ என்னைத் தடுத்தாளக் கூடாதா? இறைவா! தடுத்து ஆட்கொள்க!

திருக்கோயிலில் சண்டீசர் சந்நிதி உள்ளது. சண்டீசர், கடமைகளை நியமமாகக் கொண்டொழுகியவர். பெற்ற தந்தை என்ற பாசத்தைக் கூடக் கடந்து குறிக்கோளை உயிரெனக் கொண்டவர். தமது குறிக்கோளுக்கு இடையூறாக இருந்த தந்தையின் காலையே தடிந்தவர்.! உன்னால் சண்டீசப் பதம் அளிக்கப் பெற்றவர். அவர் சந்நிதி கூட சின்ன வாயில் உடையது.

இறைவா, நான் எதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளேன்? ஏதோ கிடைத்த வேலைகள் சிலவற்றைச் செய்கிறேன். இது சீரான வாழ்க்கையன்று. தலைகீழான வாழ்க்கை இந்தப் பொய்ம்மையான வாழ்க்கையிலிருந்து எடுத்தாள்க. குறிக்கோளில் நிற்கும் வாழ்வைத் தருக! அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் பாங்கைத் தருக!