பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

335






நவம்பர் 14


கூட்டுறவு வாழ்க்கை வாழ அருள் செய்க!


இறைவா! அறவாழி அந்தணனே! நான் வாழ ஆசைப்படுகின்றேன். நெடிய நாட்கள் வாழ ஆசைப்படுகின்றேன். நலத்துடன் வாழ ஆசைப்படுகின்றேன். ஆனால் நான் நினைக்கின்றபடி நடக்கவில்லையே! நான் வாழ முடிய வில்லையே! பிழைப்பை ஒட்டிக் கொண்டிருக்கின்றேன்.

என் வாழ்வில் நலம் என்பது நான் கனவில் கூடக் கண்டதில்லை. ஒவ்வொரு நாளும் இன்றோ, நாளையோ சாவு என்று, நாளை எண்ணிக் கொண்டிருக்கிறேன். இறைவா, நீ எனக்கு வழங்கியதெல்லாம் நல் வாழ்வுதானா? இறைவா, நானேதான் கெடுத்துக் கொண்டேனா? என்னை மன்னித்துவிடு!

வாழ்க்கையின் இயற்கையாக அமைந்த நியதி கூடி வாழ்தல், ஒத்துழைத்து வாழ்தல், ஒப்புரவாக வாழ்தல் ஆகியன. இறைவா, உண்மை, உண்மை. இந்த விதிகள் என் வாழ்க்கையின் நியதிகளாக இல்லை.

நான் கூடித்தொழில் செய்து வாழவில்லை. ஒத்துழைத்தல் என்பது இல்லவே இல்லை! ஒருமைப்பாடு இல்லை. இறைவா, என் வாழ்க்கையை ஆரவாரமான போட்டிகள் தாம் உந்து சக்தியாக இருந்து இயக்குகின்றன. அதனால் கூட்டுறவுப் பண்பு இல்லை. கூட்டு வாழ்க்கை இல்லை.

இறைவா, நான் சாவூருக்குச் செல்லும் வழியில் செல்லுகின்றேன். ஆனால், வாழ ஆசைப்படுகின்றேன்! இறைவா, சாவூருக்கு அழைத்துச் செல்லும் தன் முனைப்பு, ஆதிக்க உணர்ச்சி, சிறிதும் நலமில்லாத போட்டிகள், இவை நிறைந்த வழியிலிருந்து நான் திரும்பி வாழ்வூருக்கு வழியாகிய கூட்டுறவு வாழ்க்கை வாழ அருள் செய்க!