பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திருவருட் சிந்தனை

23



ஜனவரி 7


இன்ப வட்டமாக வாழ்க்கை அமைந்திட இன்னருள் புரிக!


இறைவா! கணிதத்தில் க்ஷேத்திர கணிதம் (GEOMETRY) என்று ஒன்று உண்டு. இதில் வட்டம் போடுவதற்கு ஒரு கருவி உண்டு. அதனைக் காம்பஸ் (Compus) என்பர். காம்பசின் நீண்ட பகுதியை வட்டத்தின் மையத்தில் நிறுத்திப் பிறிதொரு சிறிய பகுதியில் எழுது கோலைப் பொருத்தி வட்டம் போட்டால் வட்டம் அழகாக அமையும். இறைவா, எனக்கும் தான் ஆசை என் வாழ்க்கை இன்பவட்டமாக அமைய வேண்டும் என்று. ஆனால் இறைவா, வாழ்க்கையை வட்டமாக்கும் முயற்சிக்குப் பதிலாக வாழ்க்கையைக் கோழிமுட்டையாக்கிக் கொண்டே வருகிறேன், அதனால் எண்ணற்ற துன்பங்கள். இறைவா, எனக்கு வாழ்க்கையை வட்டமாக்கும் யுக்தி தெரியாமல் இல்லை. தெரிந்ததைச் செய்யவிடாமல் தடுப்பது உடற் சோம்பல்.

இறைவா, என் மனம் நின்னருளில் நாட்டம் கொண்டிடுதல் வேண்டும். பின், என் புத்தியைப் பயன்படுத்தி வாழ்க்கை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இறைவா, அப்போது என் வாழ்க்கை இன்ப வட்டமாக அமையும். ஐயமில்லை! இறைவா, என் மனம் நின்னருளில் நாட்டம் கொண்டிருத்தலைப் பாதுகாத்தருள் செய்க! முயற்சியுடைய வாழ்க்கை, தவ வாழ்க்கை! அந்த வாழ்க்கை இன்ப வட்டமாக அமையும். இறைவா, அருள் செய்!