பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

339






நவம்பர் 10


இறைவா, சினம் அடங்கக் கற்றுக் கொடு!


இறைவா, "சினமடங்கக் கற்றிலை" என்ற அறிவுரை வாழ்க்கையாக உருக்கொள்ள வேண்டும். இதுவே என் பிரார்த்தனை சேர்ந்தாரைக் கொல்லும் நெருப்பாகிய சினத்திலிருந்து விடுதலை பெறுதல் வேண்டும்.

சினம் கொள்ளுதலுக்குக் காரணங்கள் இல்லாமற் போகா! அதனால் நான் சினம் கொண்டு என்னாவது? சினம் கூடவே கூடாது! வேண்டவே வேண்டாம்! சினத்தின் வாயில்களையே அடைத்திட அருள் செய்க!

இறைவா, பணிகளைத் திட்டமிட்டபடி செய்யாமையால் எழும் சினமே மிகுதி. காரியக் கேடுகள் ஏற்படும் பொழுது சினம் வருகிறது. ஏன், நான் காரியக் கேடுகள் வரும் வரையில் வாளா இருக்க வேண்டும்? ஏன் பணிகளில் பலரை நம்ப வேண்டும்?

நான் முறையாகத் திட்டமிட்டு உறுதியாகப் பணிகளைச் செய்து வந்தால் காரியக்கேடு வராதல்லவா? நான், எனக்கு மற்றவர்கள் உபயோகப்படுவார்கள் என்று எண்ணி வாளா இருப்பானேன்?

மற்றவர்களை உபயோகப்படுத்திக் கொள்வதுதான் முறை - நடைமுறை சாத்தியம் என்ற உணர்வை உணர்த்தியருள்க. மறந்தும் ஏமாறக்கூடாது. சினத்தைத் தரும் ஏமாற்றங்களிலிருந்து விடுதலை பெற எப்போதும் விழிப்பு நிலையில் இருந்திட அருள் செய்க! நம்பியும் நம்பாமலுமிருத்தல் என்பதுதான் வாழ்க்கை நெறி முறை என்றறிய அருள் செய்க!

அழுக்காறு அவா வேண்டாம் என்ற விருப்பத்தினை அருள் செய்க. சினத்தின் காரணங்களை அறிந்து மாற்ற அருள் செய்க, சினத்தின் வாயில்களையும் அடைத்திட அருள் செய்க! சினமடங்கக் கற்றுக் கொடு. அமைதி தவழும் இனிய வாழ்க்கையினை அருள் செய்க!