பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



24

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஜனவரி 8


இறைவா! நான் பூஜ்யமாகி உன் பொன்னடி போற்றும்
வாழ்வினை அருள்க!


இறைவா, கணக்கில் பூஜ்யத்திற்கு மதிப்புண்டு. ஆம், இறைவா! ஒரு சாதாரண பூஜ்யம் ஒன்றுக்குப்பின் வருமானால் எண்ணிக்கையைப் பன்மடங்கு பெருக்கிக் காட்டுகிறது! நான் ஒரு பூஜ்யமானாலும், உனக்குப் பின்னால் நின்றால் எவ்வளவு மதிப்பு! பெருமை! ஆம், இறைவா! அருள் கூர்ந்து நீ எப்போதும் எனக்கு-முன்னால் - இடக் கைப்புறமாக நின்றருள் செய்! உன்னைச் சார்ந்து உன் வலப் பக்கத்தில் பூஜ்யமாக நான் நிற்பேன்; இதுவே போதும் இறைவா! இறைவா, நான் பூஜ்யமாவது எளிதான காரியமா? இல்லையே! ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள்! ஆசைகள்! விருப்பு வெறுப்புகள்! இவ்வளவையும் நான் தொலைத்து பூஜ்யமாவது எப்போது? இப்பிறப்பில் நடக்குமா? நடக்காதா? இது என்ன ஜோசியம்! நின் கருணையிருந்தால் நடக்கும்!

இறைவா! நீ என் மனத்துள் வீற்றிந்தருளத் திருவுளங் கொண்டால் போதும்! நீ எழுந்தருளிய உடனேயே கதிரவன் ஒளி கண்ட பனித்துளி போல என் மனத்திற்குள் ஒன்றாக குடித்தனமாகப் புகுந்து காலப்போக்கில் ஆதிபத்தியம் செய்த ஆசைகள் அனைத்தும் அகன்று போகும்.

இறைவா என் மனக்கோயிலுள் எழுந்தருள்க! என்னை பூஷ்யமாக்குக! எனக்கு முன் இருந்து எனக்குப் பூஜ்யத்தின் மதிப்பைத் தந்தருள் செய்க! இறைவா, நான் பூஜ்யம், எனக்கு முன் நிற்கும் ஒன்று நீ!