பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

355






டிசம்பர் 4


உழைத்தால் உறுதி உண்டு எனும் ஞானம் உணர்த்திய இறைவா, போற்றி!

இறைவா, உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் விளையாட்டுக் கொண்டருளும் தலைவா! போற்றி! போற்றி! உன்னிடம் நிறையக்கேட்க வேண்டும் என்றுதான் நின் சந்நிதி அடைந்துள்ளேன்! நீ அருளிச் செய்வதோ போதாது!

இறைவா, நீ குறைவிலா நிறைவு! நான் வேண்டியவாறு குறைவிலாது கொடுத்தருளினால் உனக்கென்ன குறை வந்துவிடப்போகிறது. நின் அருளிச் செயலுக்கும் அளவுகள்-நியதிகள் உண்டா?

நான் உன்னை, உன் நாமத்தை ஒரு தடவை சொன்னால் கூடப்போதும். நீ உடனே அருளிச் செய்வாய். நான் நிறையப்பெற்றுக் கொள்ளலாம் என்றிருந்தேன். நீ என் தகுதியறிந்து அருளுவதாக இருந்தால் நான் அடையக் கூடியது ஒன்றும் இல்லை.

எனக்கு இயல்பான பழக்கம் குறைவாக வேலை செய்து நிறையக் கேட்பது என்பது. இறைவா நான் ஒரு நாள் உழைக்கின்றேன். ஆனால் ஒன்பது நாள் ஊதியம் கேட்கின்றேன். சற்றே அன்புடையான் போல நடிக்கின்றேன். இந்த நிலையில் நான் எப்படி உன்னை அடைய முடியும்?

இறைவா, அறிவு அரும்புகிறது. தெளிவு தோன்றுகிறது. இறைவா, நீ ஒரு மதிப்பீட்டாளன்! அவ்வளவுதான். நான் நன்றாகச் செய்தால் நிறையக் கொடுப்பாய். இறைவா, நான் முற்றாக - முழுநலம் படைக்கத்தக்க உழைப்பினை வழங்க அருள் செய்க!

இறைவா, நான் பொய்யெலாம் தவிர்த்த அன்பினைக் காடடுகிறேன். இறைவா, அருள் செய்க! உழைத்தால் உறுதி உண்டு. இது நல்ல ஞானம்! இதனை அருளிச் செய்த பெருங்கருணைக்கு ஆயிரம் ஆயிரம் போற்றிகள்.