பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

356

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





டிசம்பர் 5



இறைவா, நான் வாழ்வாங்கு வாழ்ந்திட அருள் செய்க!

இறைவா! களிற்றுரிவை போர்த்த புண்ணியனே! யானை ஒரு பெரிய மிருகம். எனினும் யானைக்குத் தன்னைத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லை. யானை தன்னைச் செலுத்துகின்ற பாகனையும் அறிந்து கொள்ள இயலாதது; தன் தலையில் தானே புழுதியை அள்ளிக் கொட்டிக் கொள்வது; ஏன் தன்னைக் கட்டும் சங்கிலியைத் தானே எடுத்துக் கொடுப்பது!

இந்தப் பெரிய யானையைப் போல நான் வாழ்கிறேன். என்னைப் பற்றியே நான் அறிந்து கொண்டேனில்லை. நான் யார்? என்னுடைய உடலியல்பு என்ன? என் பொறிகளின் ஆற்றல் என்ன? என்னுடைய புலன்களின் இயல்பென்ன?

நான் வழிவழியாக வாழ்ந்த வாழ்நிலைகளின் படிப்பினைகள், பெற்ற அனுபவங்கள், அனுபவங்கள் வழியாக வந்தமைந்த குணங்கள் ஆகியன ஊழென உருக்கொண்டு வந்த பழவினையின் தன்மை என்ன? இவைகளைப் பற்றியெல்லாம் நான் பூரணமாக அறிந்து கொள்ளாத நிலை!

இறைவா, ஏதோ உனக்கு, உன்னுடைய கணக்கு வழக்கைக் கடந்த கருணைக்கு வேலை வேண்டுமே என்பதற்காக, நான் உடம்பொடு புணர்த்தப் பட்டேன். என் பெற்றோர் விழைந்த காதலின்பத்தின் விளைவாக நான் பிறந்தேன்! இதில் என் விருப்பம் இல்லை. அதிகாரமும் இல்லை. எனினும் நான் ஒரு மனிதன்!

என் பொறிகள் செயல்திறன் உடையவை. என் புலன்கள் அறிவு நலம் செறிந்தவை. அறிவித்தால் அறியும் தன்மையுடையவை! என் வாழ்க்கையின் சென்ற காலம் அப்படியொன்றும் மோசமில்லை என்பது மானுடனாகப் பிறந்திருப்பதனாலேயே தெரிகிறது! ஆதலால், வாழ்வாங்கு வாழமுடியும்! வாழ்வாங்கு வாழ்ந்திட அருள் செய்க!