பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

357





டிசம்பர் 6



சாதி, ஆசாரங்கள் எனும் சிறுபிள்ளை விளையாட்டுகளிலிருந்து விடுதலை செய்க, இறைவா!

இறைவா! எட்டினோடு இரண்டும், அ, உ, ம் என்ற ஓம் எனும் பிரணவ மந்திரத்தை அறியாத என்னைப் பட்டிமன்றம் ஏற்றினை! ஏற்றினை! நின் அருட் செயலுக்குப் பல நூறாயிரம் போற்றிகள்! ஆனால் இறைவா, நின் செயல் நற்பயனை விளைத்து வருகிறதா? கூர்ந்து நோக்கில் பயன் நன்றாக இல்லை.

இறைவா, பொய்-மெய் துணிதலே வாழ்க்கையின் நோக்கம்; பிறவியின் பயன். ஆனால், இன்றோ பெரும் பான்மையான விவாதங்கள் பொய்-மெய் துணிவதற்காக இல்லை. விவாதம் ஒரு பொழுதுபோக்கு. பலர் திண்ணையில் உட்கார்ந்து விவாதிப்பதிலேயே பொழுதைக் கழிக்கின்றனர்.

பல சமயங்களில் இந்த விவாதம் சூடேறி விபரீதமாகி விடுகிறது. பகைமூண்டு விடுகிறது. பிணக்குகளும் தோன்றி விடுகின்றன. விவாதத்தால் இந்த உலகில் விளைந்த தீமைக்கு அளவே இல்லை. இன்றும் அந்தத் தீமைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. மத விவாதங்கள், மதச் சண்டைகளாக மாறி மதத்திற்கு நேர் எதிரான பலனைத் தந்துள்ளன.

இறைவா, நான் உன்னை நம்புகிறேன். உன்னைப் போற்றுகின்றேன்! உன் வழியில்-அறவழியில் வாழ்கின்றேன்! உன்னுடைய இந்தப் பரந்த உலகத்திற்குத் தொண்டு செய்கின்றேன்! இது போதாதா?

இறைவா, எனக்கு எதற்கு மதம், சாத்திரக் குப்பைகள், சடங்குகள்?

சாதி ஆசாரங்கள் எனும் சிறுபிள்ளை விளையாட்டுக்களிலிருந்து விடுதலை செய்க! "நீயுண்டு நானுண்டு" என்று வாழ்ந்திட அருள் செய்க: இறைவா, அருள் செய்க!