பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

365





டிசம்பர் 14



இறைவா, இப்பிறப்பிலேயே விடுதலை பெற அருள் செய்க!

இறைவா, பந்தமும் - விடும் ஆகிய பரம்பொருளே ! இறைவா, நீயே எனக்குக் கட்டுக்களையும் அருளிச் செய்தாய்! பின், வீட்டையும் அருளக் காத்திருக்கிறாய்!

இறைவா, நான் ஒரு பட்டுப் பூச்சி போல் ஆனேன்! நானே எனக்கு ஒரு சிறையை உண்டாக்கிக் கொண்டேன், பட்டுப்புழு தனக்கு ஒரு கூட்டைத் தானே செய்து அடைத்துக் கொண்டாற்போல! கூட்டில் அடைபட்ட பட்டுப்புழுதான், பட்டுப் பூச்சியாகிறது; பின் கூட்டை உடைத்து வெளியே வருகிறது, விடுதலை பெறுகிறது!

இறைவா! நான் எனக்காக விலங்கின் குணத்தன்மையுடன் ஒரு சுற்றுவட்டம் அமைத்தேன்! அது ஒரு சிறைக் கூடம்! என்னடையது அது, "நான்” அதற்குக் காவற்காரன்! காலப்போக்கில், என்னைச் சுற்றி இருந்த சுற்றத்தை என்னுடைய நலன் கருதி நேசித்தேன்! பாவனையாக நேசித்தேன்! இதுவே என்னை மெல்ல மெல்ல வளர்த்தது. மனிதனானேன்!

நான் மனிதனான நிலையில் சுற்று வட்டத்தை உடைத்தேன்! மற்றவர்களிடமும் அன்பு காட்டினேன்! அவர்களுக்காக வாழ்ந்தேன். இறைவா, இதுவே என் வளர்ச்சி!

இறைவா, பட்டுப்பூச்சி கூட்டை உடைத்துக் கொண்டு விடுதலை பெற்றது போல நான் பூரண விடுதலை பெற அருள் செய்க: தியாகம் செய்யும் பாங்கினை அருள் செய்க, புகழ் பெறும் இச்சையிலிருந்து விடுதலை பெற அருள் செய்க!

இறைவா, நான் இப்பிறப்பிலேயே விடுதலை பெற வேண்டும்! இனியும் காலந்தாழ்த்த இயலாது இறைவா, கனிந்த அன்பு, தியாகம், சீலம், நோன்பு, ஞானம் இவற்றை அருளி இப்பிறப்பிலேயே ஆட்கொண்டருள்க!