பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

367





டிசம்பர் 16



நீ, கற்பிக்கும் பாடம் உணர்ந்து வாழ, அருள்க!

இறைவா! ஆலமர் செல்வா! கல்லாலின் கீழ் அமர்ந்து ஆசிரியப் பணி செய்த ஆண்டவனே! தென்முகக் கடவுளாக அமர்ந்து அறம் உணர்த்திய ஆசிரிய அண்ணலே!

நின் போதனையில் யாதொரு குறையுமில்லை! நான் தான் கற்றேன் இல்லை. இறைவா, வலது திருவடி மடித்து, இடது திருவடியை நிலத்தின் ஊன்றி அமர்ந்துள்ள காட்சியே ஒரு பாடம். ஆம், இறைவா! சக்தியால், உழைப்பால் நிலத்தில் ஊன்றி வளர்க என்பது பாடம்!

இறைவா, நின் கைமுத்திரை, சின்முத்திரை ஒரு காட்சியால் உணர்த்திக் கற்பிக்கும் பாடம். சுட்டுவிரலாகியஉயிராகிய நான் ஆணவத்தால் தன் முனைப்புடன் கூட்டணி அமைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்! செருக்கால் நிமிர்ந்த நிலை!

இந்த செருக்கு நிலை வாழ்க்கைக்குப் பயன்படாது. நான் கூட்டணியிலிருந்து முதலில் விடுதலை பெற வேண்டும். விலக வேண்டும். உன் திருவடியை அடைய வேண்டும்!

இறைவா! நல்ல பாடம்! ஆணவம் எனும் செருக்கி லிருந்து மீள அருள் செய்வாயாக! பொருள்மயக்கத்திலிருந்து மீட்பாயாக!

என்னை ஊழ்வினையின் பிடியிலிருந்து மீட்பாயாக! நின் தாளில் என் தலை பதித்து வணங்க அருள் செய்க! இறைவா, நீ கற்பிக்கும் பாடம் உணர்ந்து வாழ்வாங்கு வாழ அருள்க!