பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

368

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





டிசம்பர் 17



இறைவா, சடங்கு வழிபாட்டினின்றும் விலகி நின்னை நினைந்து அழுதுநிற்பேன்! அருள் செய்க!

இறைவா, உன் திருவிளையாட்டு என்று சொல்வதா? அல்லது என்னையே நான் நொந்து கொள்வதா? என் மனம் உன்னைத் தேடுவதில்லையே! உன்னில் ஒன்றுவதில்லையே!

ஆனால், சடங்குகளே நின்னைக் காணும் வழி என்று நம்பி அலைகிறார்கள். சடங்குகளுக்கு நிறைய பேர் கூடுகிறார்கள்; பணம் நிறையச் செலவழிக்கிறார்கள்! பாழுக் கிறைத்துப் பழுதாகும் வாழ்க்கை: இறைவா, காப்பாற்று!

பாழுக்கிறைத்து பழுதாகுபவர்களைக் காப்பாற்று! உன்னைக் காண வந்தருள் செய்க! நின்னைக் காட்டு! என் கண்களால் காணத்தக்கவாறு வந்தருள் செய்க! நினக்குத் தொண்டு செய்ய அருள் பாலித்திடுக. நின் புகழ் பாட அருள் செய்க!

இறைவா, இனி, நின் புகழ் பாட வேண்டும். நின்னையே நினைந்து நினைந்து அழுதுநிற்பேன்; அருள் செய்க! நின்னை மறவாதிருக்க அருள் செய்க! ஒருகால் மறந்து விட்டால் நீ என்னை மறவாது இருக்கும் வரந் தர வேண்டும்.

இறைவா! எனக்குத் தந்தை நீ ஆதலால், உனக்குப் தொழும்பாய்ப் பணி செய்வது என் கடன்! நீ எனக்குத் தந்தை போல இருந்தருள் செய்க! இது நம்மிருவருக்கும் பல தலைமுறைகளாக இருந்து வரும் கடன்! இறைவா, நினக்குத் தொண்டு செய்து, புகழ்பாட அருள் செய்க!