பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

372

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





டிசம்பர் 21



இறைவா, நான் விளக்கமுற நானே பொறுப்பேற்கும் நயத்தக்க வாழ்வினை நல்கியருள்க!

இறைவா, தேசமெலாம் விளக்கும் என் தெய்வமே! அந்தத் தேசத்தில் நான் ஒருவன் இல்லையா? என்னை விளக்கமுறச் செய்யக் கூடாதா?

இறைவா, எனக்கு ஏராளமான செய்திகள் தெரியும். அதுவும் அடுத்தவர் குற்றங்கள் அனைத்தும் தெரியும்! ஆனால், இறைவா, எனக்கு என்னைப் பற்றித் தெரியாது! எனக்குத் தெரிந்ததும் தெரியாது! தெரியாததும் தெரியாது! நான் யார்? ஒரு மனித உருவம். அவ்வளவுதான்! இறைவா, இஃதோர் இரங்கத்தக்கநிலை. என்னைக் காப்பாற்று!

என்னை நானே துன்பத்தின் ஆட்படுத்திக் கொள்கிறேன்! எனக்கு நானே எதிரி! இறைவா, என்னை அறியும் அறிவை, துணிவை எனக்குத் தந்தருள் செய்க!

நாள்தோறும் என் வாழ்நாளின் கணக்கையும் சரி பார்த்து ஆன்ம லாபத்தில் இழப்பு-ஈட்டம் பார்க்கும் பழக்கத்தினை ஏற்றுக் கொள்ள அருள் செய்க! நான் விளக்கமுற என்னை நானே ஆய்வு செய்து கொண்டு திருத்தமுறுதல் வேண்டும்.

இறைவா, தன்னாய்வு முறையைத் துணிவோடு ஏற்கும் நிலையினை அருள் செய்க! ஒரோவழி என்னை மற்றவர் ஆய்வு செய்து சொன்னாலும் ஏற்கும் மனப்பாங்கினைத் தா! நான் விளக்கமுற நானே பொறுப்பேற்கும் நயத்தக்க வாழ்வினை வழங்கி அருள் செய்க!