பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

374

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





டிசம்பர் 23



இறைவா, எந்நாளும் பணி செய்து கிடக்க அருள் செய்க!

இறைவா! இருளும் ஒளியும் ஒரிடத்தில் கண்ணுக்குத் தெரியும் வகையில் இருக்காது, இருத்தல் இயலாது. இறைவா! "நான்" இருக்கும் வரை நீ இருத்தல் இயலாது. "நான்” என்பது பொதுமையுள் அடங்க வேண்டும் அல்லது அற்றுப் போக வேண்டும்.

"நான் எளிதில் அடங்காது; அதுவும் இந்த யுகத்தில் அடங்காது. இறைவா! இது ஜனநாயகயுகம்! மக்களாட்சி முறையில், அதிகாரத்திற்கு இடம் இல்லை. தொண்டு உண்டு, பணி இருக்கும்; ஆயினும் இந்த நாட்டு நிலை வேறு.

இந்நாட்டில், அடங்காத அதிகாரப் பசி, இந்தப் பசியையும் எடுத்து விழுங்கும் விளம்பரப் பசி! ஆம், இறைவா, காரியம் நடக்கிறதோ இல்லையோ? பத்திரிகைச் செய்திபாராட்டுக் கூட்டங்கள் ஆகியன இன்றைய சமுதாயத்திற்கு வெளிச்சம் போல்வன!

இந்தயுகத்தில் "நான்” எப்படி அடங்கும்? நான் என்னும் அகங்காரம் நீங்க வேண்டும். அந்த இடத்தில் நின் அருளாட்சி நடக்க வேண்டும், இறைவா, திருவுள்ளம் பற்றுக!

'நான்' இருப்பது தெரியாமலே வாழ்தல் வேண்டும். என் தலை வெளியே தெரியக் கூடாது. மண்ணிற்குள் வேர் போல இருக்க வேண்டும். இறைவா அருள் செய்க! பணி செய்து கிடக்க அருள் செய்க! நாளும் நினக்குப் பணிசெய்து கிடப்பதே என் பணியாக அருள்க!