பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

376

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





டிசம்பர் 25



இறைவா, மண்ணில் ஞானதீபம் ஏற்றுக!

இறைவா, அன்று ஏசுபெருமான், மண்ணில் விண்ணரசு வேண்டும் என்று விண்ணப்பித்தார்! அது மிகப் பெரியது மட்டுமன்று. புத்திசாலித் தனமான வேண்டுகோளு மாகும். ஆம், இறைவா!

இன்று மண்ணை மனிதர்கள் ஆளுகின்றனர்! எப்படி ஆளுகின்றனர்? இறைவா, இந்த அரசினால் யாது நன்மை? மாறாகத் தீமையே நன்மைபோல ஊடுருவுகிறது! ஆம், இறைவா! சாராயக்கடைகளின் சாம்ராஜயம்! பரிசு மழை? விலைவாசிகள் கட்டுப்பாடின்றி ஏறிக்கொண்டே போகின்றன!

ஆசிரியர்கள் அடியாட்களாகின்றனர்! சாமியார்கள் கலகக்காரர்களாகின்றனர்! முற்றுந்துறந்த முனிவர்களிடை யிலும் புகழ்ப்போட்டி! இறைவா, தாங்க முடியவில்லை இந்தக் கொடுமை! இறைவா, நின்னரசை மண்ணில் நிலைநாட்டு! இறைவா, மண்ணில் ஞானதீபம் ஏற்றுக!

"நான்", "எனது” என்னும் செருக்கினை அகற்று. சாராயக் கடைகளை மூடு பரிசுச் சீட்டுகளை நிறுத்து! அன்பமைதியே வாழ்க்கை! அன்பமைதியை வழங்கி வாழ்வித்திடுக! இறைவா, அன்பு ஊற்றெடுக்கும் இதயமே எனக்குத் தேவை. மண்ணில் ஞானதீபத்தினை ஏற்றி அருள்க!