பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

378

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





டிசம்பர் 27



தீமைக்குக் காரணமாகிய தற்சார்புகளை நீக்கி ஒருமைப்பாட்டுடன் வாழ அருள் செய்க!

இறைவா! எந்நாட்டவர்க்கும் இறைவா! நீ ஒரு விசித்திரமான தலைவன். நீ அன்பு: நீயே அன்பு! நீ கருணைக் கடல்! ஆயினும் உனக்குப் பன்னெடுங்காலமாகத் தொழும்பு பூண்ட இந்த மானிட சாதியை ஏன் பகை மூட்டத்திற்குள் சிக்கித் தவித்து அழியும்படி செய்கிறாய்!

ஐயனே! எண்ணத் தொலையாத பிரிவினைகள்! பிரிவினை வழிப்பட்ட நச்சுத்தன்மை வாய்ந்த கசப்புணர்ச்சி, காழ்ப்புணர்ச்சி, பகைமை, கலகம், கொலை, இன்னோரன்ன தீமைகளில் இந்த மனித உலகம் அழிந்து கொண்டிருக்கிறது! இறைவா, உனக்குக் கருணை இல்லையா? எங்களைக் காப்பாற்று.

மனித உலகில் எந்தப் பிரிவினையும் கூடாது. வேற்றுமைகள் அனைத்தும் செயற்கை மனிதனின் படைப்பு! இறைவா, உலகம்- மனித உலகம் வாழ ஒருமைப்பாடு தேவை! ஒருமைப்பாடு உடைய மனித உலகத்தைக் காணும் ஆற்றலினை அருள் செய்க!

இறைவா, நான் சார்புகளின் வழி அமைபவன்! என் சுபாவம்கூட என் சார்புகளுக்கு ஏற்றாற்போல விளங்க வேண்டும். புதிய சார்புகளைப் பெறுதல் என்பது நின் திருவுள்ளம் ! தீமைக்குக் காரணமாகிய தற்சார்புகளை நீக்கி வாழ்ந்திட அருள் செய்க!

இந்த உலகம் உன்னுடையது! இந்த உலகில் உள்ள அனைத்தும் உன்னுடைய உடைமைகளே! எனக்கிங்கே என்ன அதிகாரம் வேண்டியிருக்கிறது? அதிகாரம் வேண்டவே வேண்டாம், இறைவா!

இறைவா! ஒருமைப்பாடே உன்னை வழிபடும் மந் திரம் ஒப்புரவே உனக்குச் செய்யும் வழிபாடு! ஒருமைப்பாடு, ஒப்புரவு ஒழுக்கங்கள் என்பால் அமைய அருள் செய்க! இறைவா, ஒருமையுடன் நின் மலரடி போற்றி மகிழ்ந்து வாழ அருள் செய்க!