பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

379






டிசம்பர் 28



இறைவா! உன்னைக்காணும் வழியை உணர்த்துக!

இறைவா! "மெய்ப்பொருள் காண்பதறிவு” என்பது திருக்குறள். அதாவது உண்மையைத் தேடுதல் அறிவு! இறைவா! எது உண்மை, எது உள்பொருள், எது என்றும் உள்ள பொருள் என்று தேடுவது?

எந்தப் பொருளால் நிலையான பயன் கிடைக்குமோ அது உள்பொருள்; உண்மைப் பொருள்! இறைவா, நீயே உண்மை! நீயே, மெய்ப்பொருள்! ஆனால் உன்னைத் தேடும் ஆர்வம் இல்லையே? ஒரோவழி தேடினாலும் நீ இருக்கும் இடத்தில் நான் தேடுவதில்லை.

இறைவா! நீ எங்கிருக்கிறாய்? இறைவா! நீ எங்கும் இருக்கிறாய்! சில இடங்களில் விளங்கித் தோன்றுகிறாய்! இறைவா! எல்லா உயிர்களிடத்திலும் நீ விளங்கித் தோன்றுகிறாய்!

இறைவா, உலக உயிர்களை நேசித்து அன்பு காட்டினால் உன்னைக் கண்டு கொள்ளலாம். இதுவே உண்மை! முதலில் உன்னைத் தேடும்வழி சரியாக இருத்தல் வேண்டும். நீ வேறு, நான் வேறு! நானே நீ என்றாகிவிட்டால் தேடும் முனைப்புத் தோன்றாது.

இறைவா, நீ என்உள்ளும் இருக்கிறாய்! உன்னை நான் காண வேண்டும். உன்னைக் காண்பதற்குரிய ஒரேவழி உயிரிரக்கம் காட்டுவதேயாகும்.

மனத்தால்-மொழியால்-உடம்பால் மற்ற உயிர் களுக்கு நன்மை செய்து வாழ்வதே- உண்மையைத் தேடுவ தற்கு- உன்னைத் தேடுவதற்குரிய ஒரே வழி! இறைவா உன்னைக் கண்டு மகிழும் வழியை அருள்க!